விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மதுரை மண்டல நிர்வாகிகள் அவசரக் கூட்டம் இன்று மதுரை மண்டல கௌரவத் தலைவர் ஆதிமூலம் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று முல்லைப் பெரியாறு அணை குறித்தும், இன்றைய பிரச்சனையும் தீர்வு குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம், "முல்லைப்பெரியாறு அணை திறப்பு குறித்து தமிழ்நாட்டின் உரிமையை மீட்க கோரி நவம்பர் 12-ம் தேதி  தேனி மாவட்டம் கூடலூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.



முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசை கண்டித்தும், சட்ட விரோதமாக முல்லைப்பெரியாறு அணைக்குள் நுழைந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின்றி தண்ணீரை திறந்ததற்காக கேரள அமைச்சர்கள் மீது  மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அணைப்பகுதிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க கோரியும் முதற்கட்ட போராட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும், இதனை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும். தண்ணீர் திறப்பு குறித்து உரிய முறையில் அறிவிக்கப்பட்டதாக தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சரின் கருத்தை மறுக்கவில்லை. அது உண்மை எனில் ஏன் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கூறவில்லை. அணை திறப்பு குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தால்  இந்த விபரீத விளைவு ஏற்பட்டிருக்காது. உரிய அனுமதி பெறப்பட்டதா என்ற அமைச்சரின் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.



தமிழ்நாட்டுன் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் கேரள அமைச்சர்கள் நுழைந்தது எப்படி, நீர்பாசனத்துறை அமைச்சர் தண்ணீரை திறந்துவிட்டது மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தியதோடு சந்தேகமும் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தை கேரள அரசு மீறுகிறது. கேரள அரசு அனுமதித்தால் தான் தமிழ்நாடு பொறியாளர்களே நுழையும் நிலை உள்ள நிலையில் கேரள அமைச்சர்கள் நுழைந்தது எப்படி? எனவே, மத்திய தொழில் பாதுகாப்புபடை பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

 

மேலும் அவர்கள் வைத்த கோரிக்கைகள்


 

1) கடந்த 2018 கேரள அரசு புதிய அணை கட்ட வரவு திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை திரும்பப் பெற செய்திட வேண்டும்.

 

2) அணைக்கு  மும்முனை மின் இணைப்பு வழங்கினால்தான் அணைக்கதவுகள் ஒரே நேரத்தில் திறந்து மூட முடியும் எனவே உடன் மும்முனை மின் இணைப்பு பெறவேண்டும். 

 

3) அணைக்கு பொறியாளர்கள் சென்று வர தமிழ்நாடு அரசு வழங்கிய அண்ணா படகினை இயக்க கேரளம் அனுமதி வழங்க மறுத்ததால் 5 வருடங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தலின்றி அவசர பணிகளை மேற்க்கொள்ள அவ்வப்போது  பொறியாளர்கள் நமது படகு மூலம் சென்று வர அனுமதி பெற வேண்டும்.

 

4) செயற்பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் அணைப்பகுதியில் தங்கி பணியாற்றவும், அலுவலக செயல்பாட்டிற்கும் உரிய நடிவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு முழு  பாதுகாப்பும் வழங்கிட வேண்டும்.

 

5) 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதற்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு உரிய சாலை அமைத்து  கனரக வாகன போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்

 

6) அணைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசை கோரி பெற வேண்டும்.

 

7) அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக இரு மாநில உறவுகளை சீர்குலைக்க முயற்சியோடு செயல்பட கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின்,வருவாய் துறை அமைச்சர் ராஜன் இருவரையும் குடியரசுத் தலைவர் பதவிநீக்கம் செய்யவேண்டும்.