பிரிட்டிஷ் இந்தியாவில் மதுவிலக்கு


பிரிட்ஷ் இந்தியா காலத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தபோது மதுவிலக்கு என்பது மகாத்மா காந்தியடிகளின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் முதன்முதலாக மதுவிலக்கை அமல்படுத்தினார். பின்னர் அதனை சித்தூர், கடப்பா, வட ஆற்காடு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். அதற்கு பின்னர் மதராஸ் மாகாண முதல்வரான ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் மாகணம் முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் மதராஸ் மாகாணம் முழுவதும் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் கள்ளுக்கடைகளும் மூடப்பட்டன. பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் சில மருத்துவ தேவைகளுக்காக மட்டும் மருத்துவர்களின் அனுமதியை பெற்று அரசின் பெர்மிட் வாங்கி மது அருந்தலாம் என்ற தளர்வால் பணக்காரர்கள் பலர் சான்று பெற்று மது அருந்த தொடங்கினர். கள்ளச்சாராய கண்காணிப்புக்கும், கள்ளச்சாராய ஒழிப்புக்கும் அதிக நிதியை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.



மது விற்பனை தொடக்கமும் முடிவும்:


இந்த நிலையில் அண்ணா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை படுபாதாளத்தில் இருப்பதை சுட்டிக்காட்டியும் மதுவிலக்கு கொள்கையை பின்பற்றுவதால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்டவும் நிதிவேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார்.



மதுவிலக்கை இனி புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி அளிக்க முடியும் என கைவிரித்தார் இந்திரா காந்தி. இந்திரா காந்தியின் இந்த முடிவால் கடும் அதிருப்தி அடைந்த கருணாநிதி 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி மதுவிலக்கு சட்டத்தை தளர்த்தி கள் மற்றும் சாராய கடைகள் செயல்பட அனுமதி அளித்தார். ஒரு லிட்டர் சாராயம் பத்து ரூபாய்க்கும், ஒரு லிட்டர் கள் ஒரு ரூபாய்க்கும் விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டு தாலுகா வாரியாக 139 மொத்த வியாபாரிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலமாக சில்லறை வியாபாரிகளுக்கு கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.



இந்த முடிவால் ஆண்டுக்கு 26 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. மது விலக்கு சட்டம் தளர்வால் கருணாநிதி அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் 1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி மீண்டும் பூரண மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார் கருணாநிதி


மதுக்கடைகளை மீண்டும் திறந்த எம்ஜிஆர்


1977ஆம் ஆண்டு தமிழக முதல்வரான எம்ஜிஆர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை 3 வரை சிறையில் அடைக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். தமிழக அரசின் நிதி வருவாய் கடுமையாக குறைந்த நிலையில், 1981ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பூரண மதுவிலக்கு சட்டத்தை தளர்த்தினார் எம்ஜிஆர். வெளிநாட்டு வகை மதுவகைகளை தயாரிக்க 10 நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமங்களை வழங்கியது எம்ஜிஆர் அரசு.



மது விற்பனையை ஒழுங்குப்படுத்தி வருவாய் அளவை உயர்த்தும் நோக்கோடு இந்திய நிறுவனச் சட்டம் 1956-இன் கீழ் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (Tamil Nadu State Marketing Corporation-TASMAC) – நிறுவனத்தை தொடங்கினார் எம்ஜிஆர். தமிழகம் முழுவதும் மது வகைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யும் ஏக போக உரிமையை டாஸ்மாக் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் மது உற்பத்தி, மொத்த மற்றும் சில்லறை விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் கட்டுபட்டுத்தி வருகிறது. சில்லறை விற்பனையை மதுவிற்பனை செய்வதற்கான அனுமதியை அரசுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே வழங்கியதால் எம்ஜிஆர் அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.


மலிவுவிலை மதுவை அறிமுகப்படுத்திய கருணாநிதி



எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி அரசு டாஸ்மாக் நிறுவன விற்பனையில் மலிவு விலை மது விற்பனையை அறிமுகம் செய்தது. மலிவு விலையில் மதுவை விற்பனை செய்வதற்காகவே TAMILNADU SPIRIT CORPORATION- உருவாக்கப்பட்டது. இந்த பிரச்னை 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் எதிரொலித்தது. 1991ஆம் ஆண்டில் மலிவு விலை மது விற்பனையை ரத்து செய்த ஜெயலலிதா விஸ்கி, பிராண்டி, பீயர் உள்ளிட்ட வெளிநாட்டு மதுபானங்களின் இந்திய தயாரிப்புக்கு தொடர்ந்து அனுமதி வழங்கினார்.


ஜெயலலிதாவின் முடிவால் கோடிகள் கொட்டிய டாஸ்மாக்



1997ஆம் ஆண்டில் நூறு மில்லி பாட்டில்களில் மதுவை அடைத்து விற்கும் முடிவை அப்போதைய கருணாநிதி அரசு எடுத்தது. 2001-ஆம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது 4,500 மதுக்கடைகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் 2003-ஆம் ஆண்டில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்த ஜெயலலிதா. சில்லறை விற்பனையை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக அரசுக்கு மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்ததால் அடுத்தடுத்து வந்த அரசுக்களும் இந்த நடைமுறையை தொடர்ந்தன. 


 2016 தேர்தலில் வலுப்பெற்ற பூரண மதுவிலக்கு கோரிக்கை



இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுவிலக்கு கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டத்தின்போதே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பூரண மதுவிலக்கு கோரிக்கையை பாமக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே வலுவாக பேசி வந்த நிலையில் 2016 திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் 2016 தேர்தலில் ஆட்சியமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முதற்கட்டமாக சிலநூறு மதுக்கடைகளை மூடினாலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு படிப்படியான மதுவிலக்கு என்ற தேர்தல் அறிக்கை அறிவிப்பு காற்றில் பறந்த காகிதமானது. இந்த நிலையில் அடுத்து வந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் முன்பு குறிப்பிடப்பட்டிருந்த பூரண மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதே நிலைதான் தொடர்ந்து, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், மதிமுகவின் தேர்தல் அறிக்கைகளிலும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, பாஜக தேர்தல் அறிக்கையிலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசை வலியுறுத்துவோம் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. 


மாற்று வருவாய் தேடுவதே தீர்வு


1983ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 183 கோடியாக இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் 21 ஆயிரத்து 828 கோடியாகவும் 2020ஆம் ஆண்டில் 30ஆயிரம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. மதுவின் மீது அரசு விதிக்கும் வரியின் மூலமும், பார் உரிமங்களை தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலமும் தனியாக தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. தமிழ்நாடு நிதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் டாஸ்மாக் கடைகள் மூலமே தமிழக அரசு ஈட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மது விற்பனையை குறைத்து சுற்றுலா உள்ளிட்ட துறைகளை மேம்படுத்து அதன்மூலம் மாற்று வருவாயை தமிழக அரசு ஈட்ட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பரவலாக எழுந்துள்ளது.