மிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் மற்றும் மே 2021-க்கான கொரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியிருப்பதாக அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி அரசு வெளியிட்டுள்ள கொரோனா மரண எண்ணிக்கையை விட உண்மை எண்ணிக்கை 13.7 மடங்கு அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளது.  இதுபற்றிய அறிக்கையில், 


’முதலாவதாக இந்தப் பெருந்தொற்று காலத்தில் தொண்டாற்றிய அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அறப்போர் இயக்கம் தலை வணங்கி, பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. இந்நாடு மற்றும் மாநிலத்தின் லட்சக் கணக்கான மக்களைக் காப்பாற்றிய பெருமை இவர்களையே சேரும். எனினும், கடந்த இரண்டு மாதங்களில் நம்மில் பலர் நமது உற்றார் உறவினர்கள் இறப்பதை கண்டும் கேட்டும் வருகையில், நமது தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அது மிக குறைவாக உள்ளதாக தோன்றியது. இறுதிச் சடங்குகள் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாக நின்ற காட்சி நாடு முழுவதும் இதே நிலைமை தான் நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது. எனவே, இந்த அறிக்கையில் தமிழ்நாட்டின் 6 மருத்துவமனைகளில் கொரோனா இரண்டாம் அலை ஏப்ரல் மே மாதங்களில் இறப்பு தகவல்களை துல்லியமாக கணக்கிட்டும் அவை கடந்த ஆண்டை விட எந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்பதை கணக்கிட்டும், மேலும் அரசு வெளியிட்டுள்ள கோவிட் இறப்பு எண்ணிக்கையுடன் அவற்றை ஒப்பிட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.




மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் கோவிட் காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுப்பதாக அறிவித்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இதனால், கோவிட் இறப்பு எண்ணிக்கையில் உள்ள தவறுகளைத் திருத்த இந்த அறிக்கை உதவும் என எதிர்பார்க்கிறோம்.இந்த ஆய்வு மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டது.


கண்டுபிடிப்புகளின் சாராம்சம் இந்த கண்டுபிடிப்புகளின் சாராம்சம்:


1.ஜனவரி முதல் மார்ச் 2021 வரை 6 மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு சுமார் 2000 அளவே இருந்தது. கடந்த ஆண்டுகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூட சுமார் 2000 அளவே இருந்தது. ஆனால், ஏப்ரல் 2021ல், இறப்பு எண்ணிக்கை 3009 ஆகவும் மே 2021ல் 8690 ஆகவும் உயர்ந்துள்ளது.


2.கடந்த சில மாதங்கள் மற்றும் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மற்றும் மே 2021ல் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பதை 6  மருத்துவமனைகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மே மாதத்தின் இறப்பு எண்ணிக்கை கடந்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.


3. ஏப்ரல் மற்றும் மே 2021ல் இந்த 6 மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கை 11699. ஏப்ரல் மற்றும் மே 2019 எண்ணிக்கையை விட 7262 அதிகமாகவும் ஏப்ரல் மற்றும் மே 2020 எண்ணிக்கையை விட 8438 அதிகமாகவும் உள்ளது. எனவே இந்த மருத்துவமனைகளில் நிகழ்ந்திருக்கக் கூடிய கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 7262 முதல் 8438 வரை இருக்கக்கூடும்.


4.ஊடக அறிக்கையில் (media bulletin) இந்த மருத்துவமனைகளில், ஏப்ரல் மற்றும் மே 2021ல் நிகழ்ந்ததாக வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை 863 மட்டுமே (13.06.2021 அன்று வரை உள்ள தகவல்).


5. எனவே இந்த 6 மருத்துவமனைகளின் இறப்பு வீதம், சுகாதாரத்துறை வெளியிட்ட எண்ணிக்கையை விட 13.7 மடங்கு அதிகமாக உள்ளது. 13.7


6. இந்த 6 மருத்துவமனைகளில், கோவிட் மற்றும் கோவிட் சார்ந்த (சிக்கல்களால் நேர்ந்த) நோயினால் ஏற்பட்ட இறப்புகள், சுகாதாரத்துறை வெளியிட்ட இறப்பு எண்ணிக்கையை விட 8.4 முதல் 9.8 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்பது ஆய்வில் தெரிகிறது. அதாவது, கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 8.4 முதல் 9.8 மடங்கு வரை குறைவாக வெளியிடப்பட்டிருக்கக்கூடும் என்றும் சொல்லலாம். 8.4 முதல் 9.8 மடங்கு குறைவாக உள்ளதை மாநில அளவில் இட்டுப்பார்த்தால், தமிழ்நாட்டில் மொத்த கோவிட் சார்ந்த இறப்புகளின் எண்ணிக்கை அரசு வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையான 12870க்கு மாறாக 108108 முதல் 126126 ஆக இருக்கக்கூடும்.


8. மேலும் கொரோனாவால் இறந்தவர்கள் சிலரது CASE STUDIES உம் அவர்கள் இறப்பை இன்று வரை அரசு எப்படி வெளியிடவில்லை என்பதையும் இறந்த காரணங்களில் கொரோனா என்ற காரணம் எப்படி பலருக்கு போடப்படாமல் இருக்கிறது என்பதையும் ஆய்வில் இணைத்துள்ளோம்


9. ICMR மற்றும் WHO அறிவுறுத்தலின் படி இறந்ததற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டிய Medical Certification for cause of death வழங்கப்படுவதில்லை. 




கோவிட் காலங்களில் நடந்த அனைத்து மரணங்களையும் தணிக்கை செய்யவும், 007.1 மற்றும் 007.2 ஆகிய கோவிட் இறப்பு கோடுகளின் காரணமாக இறந்தவருக்கு இறப்பின் காரணத்திற்கான மருத்துவச் சான்றிதழ்களை (Medical Certificate for Cause of Death - MCCD) வழங்கவும் உடனடியாக ஒரு தன்னிச்சையான ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.


இந்த ஆய்வின் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கிறோம் :


கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவற்றை நாங்கள் உடனடியாக அரசுக்குப் பரிந்துரைக்கிறோம்.


1. பிரச்சனை உள்ளது என்பதை முதலில் ஒப்புக்கொள்வதே சரியான நடவடிக்கை எடுப்பதற்கான முதல்படி ஆகும். எனவே, முதலில் அரசும் துறைசார் அதிகாரிகளும் கோவிட் மரணங்கள் பெரும் அளவில் குறைந்து வெளியிடப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


2. இறப்புச் சான்றிதழ்கள், இறப்பு சார்ந்த தகவல் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் நிகழ்ந்த இறப்புகள் ஆகியவற்றை அரசாங்கம் இணையத்தில் வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும்.


3.இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இறுதி இறப்புச் சான்றிதழ்களில் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படாது. ICMR விதிமுறைப்படி, இறப்பிற்குப்பின் மருத்துவமனைகள் அளிக்கும் இறப்பின் காரணத்திற்கான மருத்துவச் சான்றிதழில் (Medical Certificate for Cause of Death - MCCD) இறப்பிற்கான காரணம் பதியப்பட வேண்டும். தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள் இறந்தவர்களின் உறவினர்களிடம் இறப்பின் காரணத்திற்கான மருத்துவச் சான்றிதழ் படிவம் 4ஐ வழங்குவதில்லை. எனவே, அனைத்து மருத்துவமனைகளும் தங்கள் மருத்துவமனைகளில் இறக்கும் அனைத்து நோயாளிகளுக்கும் ICMR விதிமுறைப்படி MCCD வழங்கும்படி அரசாங்கம் உடனடியாக ஆணையிட வேண்டும்.


4.தற்போது நிலவும் சூழலில், அரசு வழங்கும் இழப்பீடை வாங்குவதற்குத் தகுதியானவர் பெரும் அளவில் பாதிக்கப்படுவர் ஏனெனில், இந்த இழப்பீடைப் பெற இறப்பிற்கான காரணம் கோவிட் என்றிருக்க வேண்டும் என்பதை அரசு தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, இந்த குறைவான இறப்பு எண்ணிக்கைகள் திருத்தப்படும் வரை, பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கோவிட் காரணமாக குடும்பத்தாரை இழந்தும் இழப்பீடு பெற முடியாமல் தவிப்பர். எனவே இது உடனடியாக திருத்தப்பட வேண்டும்.


5.கோவிட் காலங்களில் நடந்த அனைத்து மரணங்களையும் தணிக்கை செய்யவும், 007.1 மற்றும் 007.2 ஆகிய கோவிட் இறப்பு கோடுகளின் காரணமாக இறந்தவருக்கு இறப்பின் காரணத்திற்கான மருத்துவச் சான்றிதழ்களை (Medical Certificate for Cause of Death - MCCD) வழங்கவும் உடனடியாக ஒரு தன்னிச்சையான ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.


6.கோவிட் காரணமாக இறந்திருக்கக்கூடியவரின் உறவினர்களுக்காக ஒரு எளிமையான துயர்தீர்ப்பு முறைமை நிறுவப்பட்டு, அதன் மூலம் இந்த தன்னிச்சையான ஆணையம் இவர்கள் புகார்களை நிவர்த்தி செய்ய பவண்டும். பொருந்தும் இடங்களில், இறப்பின் காரணம் கொவிட் என்பதைப் பதிவிட்ட MCCD வழங்கப்பட வேண்டும். மீண்டும் திருத்தி வழங்கவோ மருத்துவமனைகளுக்கு இந்த ஆணையம் ஆணையிட வேண்டும். மருத்துவமனைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அதனை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தப் புள்ளிவிவரங்கள் அரசின் பார்வைக்கும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

Also Read: சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!