Madras High Court : சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசா வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அமர்வுகள் அறிவிப்பு


கோடை காலத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் தாக்கலாகும் வழக்குகளை விசாரிப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னை மற்றும் மதுரையில் மே மாதம் முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன் கிழமையில் மனு தாக்கல் செய்யலாம் என்றும், வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் மனுக்கள் விசாரிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


”மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும்  செவ்வாய் கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம் என்றும், புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் மனுக்கள் விசாரிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.


29 நீதிபதிகள்


”விடுமுறை காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜெ.சத்யநாராயண பிரசாத், ஜி.கே.இளந்திரையன், எஸ்.சௌந்தர், அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, கே.ஜி.திலகவதி, சி.வி.கார்த்திகேயன், செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏ.ஏ.நக்கீரன், கே.குமரேஷ்பாபு, முகமது சபீக், பி.புகழேந்தி, சத்திகுமார் சுகுமார குரூப், வி லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரிக்க உள்ளனர்.


இதேபோல, மதுரை கிளையில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.விஜயகுமார், ஆர்.தாரணி, ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, ஆர்.கலைமதி, என்.மாலா, டி.வி.தமிழ்ச்செல்வி, எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா, பி.வடமலை ஆகியோர் விசாரிப்பார்கள்" என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.


வழக்கமாக விடுமுறை கால அமர்வுகளில் தலைமை நீதிபதியாக இருப்பவர்கள் வழக்குகளை விசாரிக்காமல், நிர்வாக பணிகளில் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் அமைக்கப்பட்ட கோடைகால அமர்வுகளில், கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகள் குறித்த வழக்குகள் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வே விசாரித்தது.


இந்நிலையில், தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மே 24ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், கோடை கால அமர்வுகளில் சக நீதிபதியுடன் சேர்ந்து அவசர வழக்குகளை விசாரிக்க உள்ளார்.


அதன்படி மே 15 முதல் 21-ஆம் தேதி வரை மதுரை கிளையில் நீதிபதி என்.மாலா உடன் கூடிய அமர்வில் வழக்குகளை விசாரிக்க உள்ளார். அதேபோல மே 22, 23, 24-ஆம் ஆகிய தேதிகளில் சென்னையில் நீதிபதி முகமது சபீக் உடன் கூடிய அமர்வில் வழக்குகளை விசாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Liquor License: சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு மைதானங்களில் மது அருந்த இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!