18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில்  சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்பு தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், வகுப்பறை ஒன்றினுள் சென்று பொது அறிவுக் கேள்விகளை கேட்டு பரிசுகளையும் வழங்கினார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அளித்த பேட்டியில், 2020 ம் ஆண்டு மார்ச் 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டதால் 600 நாட்களாக இளம் சிறார்களின் கல்வி மறுக்கப்பட்டு, அவர்களுக்கு மன உளைச்சல் தரும் விதமாக அமைந்துவிட்டது. 


முதலமைச்சராக ஸ்டாலின் வந்த பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த 5 மாதங்களாக ஏராளமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில்  முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 71 சதவீத முதல் தவணை தடுப்பூசி, 31 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. 


முதல்  தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையை 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு மூலம் மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. காலை மடுவின்கரையில் முதலமைச்சர் மாணவர்களை வரவேற்றார். முதலமைச்சரே மாணவர்களை வரவேற்றது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு. 




இங்கு 8ம் வகுப்பில் 20 மாணவிகள் பயில்கின்றனர். அவர்களிடம் பொது அறிவுக் கேள்வி கேட்டு பரிசுகளை வழங்கினோம். 20 பேரும் பரிசு பெற்றனர். எனவே மாணவர்களின் கல்வி அறிவு குறையவில்லை என்பது தெரிய வருகிறது. 


தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் நேற்று இரு மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டு அவர்களை சார்ந்த  115 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு  13 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்கள் நலமாக இருப்பதால்  வீடுகளிலேய  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


அடுத்தகட்டமாக மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என கண்காணிக்கப்படும். மாணவர்களே தங்களது பெற்றோரிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் நிலை ஏற்படும் . 


18 வயதுக்குட்பட்டோருக்கு  தடுப்பூசி தயாராக உள்ளதாக மத்திய அரசு சார்பில்  கூறியுள்ளனர்  , அதற்கான விலை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையிடம் பேசி வருகிறோம். 


மொத்தமாக 10 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மெகா தடுப்பூசி முகாம் காரணமாக வார நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஊராட்சிகளுக்கு சென்று தடுப்பூசி பணியை பார்வையிடுகிறேன். 


கேரள எல்லைக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை. கொரோனா, நிஃபா உட்பட பல தொற்றுகள் அந்த மாநிலத்தில் தீவிரமாக உள்ளன. டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் 400 என்றளவில் உள்ளது. 


ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்துபவர்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை இல்லாமல் பிற நாளில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 


பண்டிகைக் காலம், 14 மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு என்பதையும் தாண்டி தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டு வருகிறது . அடுத்த வாரம் தடுப்பூசி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண