• அமெரிக்காவில் மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று நாளொன்றுக்கான பாதிப்பு 162724 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாவது டோஸுக்கு அடுத்தான பூஸ்டர் டோஸ் போடுவதற்கு அந்த நாடு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு மக்களைப் பதட்டமடையச் செய்துள்ளது.



  • நாடாளுமன்றத்தில் ஒருமனதாக இயற்றப்பட்ட ஓபிசி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மருத்துவக் கல்விகளில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்னும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 


  • கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் நெறிமுறைகள் தளர்வு குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.  செப்.1ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் நெறிமுறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் மறு ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். 


  • ஆக 23 முதல் 10ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அரசுத்தேர்வுகள் இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார். 




  • அதிமுக முன்னாள் மூத்த அமைச்சர்களுடன் நேற்று தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊழல், வசூல் செய்வதை மட்டும் தான் இன்றைய அரசு செய்கிறது. கரெப்ஷன், கலெக்ஷன்,  வென்டட்டா(பழிவாங்குவதை) மட்டும் தான் திமுக செய்கிறது. இது தான் அவர்களது 100 நாள் சாதனை. திமுக அரசு பொறுப்பேற்ற 100 நாளில் மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்திருக்கிறார்கள் எனக் கூறினார்.
     

  • டீசல் விலை தொடர்ந்து சரிவு. மூன்றாவது நாளாகப் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 18 காசுகள் குறைந்து 
    சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.84க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து லிட்டர் ஒன்று 94.02 காசுக்கு விற்கப்பட்டது.


  • தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




  • தலிபான் ஆக்கிரமிப்பிலிருந்து  தப்பியோடிய ஆஃப்கானிஸ்தானின் கால்பந்தாட்ட வீரர் ஷக்கி அன்வாரி விமானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்காவின் சி-17 ரக விமானத்தில் ஏற முயன்றபோது ஏற்பட்ட விபரீதம்.