திருநெல்வேலியைச் சேர்ந்த சுதா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "38 வயதான தன்னுடைய கணவர் ரமேஷ் எல்லை பாதுகாப்பு படையில்(BSF) ஜல்பைகுரி மாவட்டம், மேற்கு வங்காள மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பச்செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை பார்த்து வருகின்றேன்.எனது கணவர் 60 நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்தார்.  மீண்டும் 28.08.2021 ரயில் மூலமாக பணிக்கு செல்ல புறப்பட்டார். 30.08.2021 சீல்டா ரயில் நிலையத்தில் சென்று அடைந்ததாக என்னிடம் தெரிவித்தார். பின்னர், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என் கணவரின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னுடைய கணவர் பணியில் சேரவில்லை என தெரிவித்தார். இதனால், திருநெல்வேலி பழுவூர் காவல் நிலைத்தில் பூகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, எனது கணவர் ரமேஷை கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "எல்லையோர பாதுகாப்புப்படை வீரர், தலைமறைவாகி விட்டதாக அறிவிக்கலாமா? என கேள்வி எழுப்பினர். வழக்கில் எல்லை பாதுகாப்பு படை உரிய பதிலளிக்க வேண்டும், தவறினால் கமாண்டெண்ட் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என கூறி வழக்கை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 








 

நெல்லை மாவட்ட அரசு வழக்கறிஞர்  தாது மணல்  பதுக்கியதாக கூறப்படும் வழக்கு -  கனிம வளத்துறை இயக்குனர்  பதில் தர உத்தரவு

 

திருநெல்வேலி திசையன்விளை சேர்ந்த குமரேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நம்பியாற்றுப் படுகையில் இருக்கக்கூடிய மணலில், விலை உயர்ந்த, சக்திமிக்க தாதுக்கள் மிகுந்து இருப்பதால் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் மணல் எடுக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இந்த மணலில் Zircon,illuminate, monazite,sillimanat போன்ற விலையுயர்ந்த தாது மணல் உள்ளது.இந்நிலையில்  திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில்  அரசின் குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரியும் ராமமூர்த்தி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தாது மிகுந்த மணலை கடத்தி பதுக்கி வைத்துள்ளார். இது சட்ட விரோதமாகும்.இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் அவருக்கு சாதகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

 

இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் , மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. அவர்  சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மணலில் விலை உயர்ந்த தாதுக்கள் உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருந்தார்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் அரசு வழக்கறிஞராக இருந்து கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

 

எனவே இந்த வழக்கை திசையன்விளை போலீசார் விசாரணை செய்தால் நேர்மையான விசாரணையாக இருக்காது. ஆகவே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அதுவரையில் திசையன்விளை போலீசார் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

 

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், கனிம வளத்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சிபிசிஐடி மற்றும் சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.