முன்னறிவிப்பின்றி வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவலுக்கு பத்திரபதிவு துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வழிகாட்டி மதிப்பு மாற்றப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


முன்னறிவிப்பின்றி உயர்தபட்டதா வழிகாட்டி மதிப்பு?


வழிகாட்டி மதிப்பு என்பது அரசாங்கத்தின் ஆவணங்களின்படி, சொத்து ஒன்றின் நிர்ணயிக்கப்பட்ட சந்தை மதிப்பு ஆகும். சொத்து வரி, முத்திரைத்த் தீர்வைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் மூலமாக மாநில அரசுக்கு வருமானம் வருகிறது. அதுபோல அவ்வப்போது வழிகாட்டி மதிப்பை, சந்தை மதிப்பின் விகிதங்களுக்கு நிகராக மாற்றி அமைப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதனை தீர்மானிக்கும் பொறுப்பு முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறையிடம் இருக்கிறது. வரும் தேதியை குறிப்பிட்டு, அதில் இருந்து மாற்றம் காண உள்ளது என அறிவிப்பு வெளியிட்டு அதனை உயர்த்துவது வழக்கம். ஆனால் சமீபத்திய உயர்வில் முன்னறிவிப்புகள் எதுவும் இல்லை என்று செய்திகள் வெளியாகின.



செய்தியை மறுத்த பதிவுத் துறை


ஆனால் அந்த செய்தியை மறுத்து பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்ட செய்திக் குறிப்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47(AA)-ன் படி பதிவுத்துறை தலைவர் தலைமையில் வழிகாட்டி மதிப்பை சீரமைக்க மைய மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைய மதிப்பீட்டுக்குழு 16.08.2023 அன்று கூடி இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அந்தந்த மாநகராட்சி. நகராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக கொண்டுள்ள தெரு/சர்வே எண்களுக்கு மட்டுமே இம்மதிப்பு மாற்றியமைக்கப்பட்டது. அனைத்து தெரு/சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பானது மாற்றியமைக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: IND vs IRE 1ST T20: ஆடாம ஜெயிச்சோமடா..! அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா.. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


செய்தித்துறை வெளியிட்ட அறிக்கை


மேலும்,"ஒரு சில ஊடகங்களில் முன்னறிவிப்பின்றி வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது என்று வந்துள்ள செய்தி தவறான செய்தி ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பானது http://tnreginet.gov.in/portal/ என்ற பதிவுத்துறையின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக மேலேற்றம் செய்யப்பட்டுள்ளது," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும், இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளள என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, நாள் 01.04.2023 முதல் ஏற்கனவே, அதாவது 08.06.2017 அன்று இருந்த வழிகாட்டி மதிப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வைகபட்ட கோரிக்கை


மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக இருந்ததால் வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றாற்போல் கடன் பெற முடியவில்லையென கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று நடைபெற்ற பதிவுத்துறை கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டடம் கட்டி விற்போர் சங்க பிரதிநிதிகளும், மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்போர் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்திருந்ததாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்று ஏகமனதாக கோரிக்கை வைத்தனர். மேலும் விளைநில மதிப்பும் சில இடங்களில் மிக மிக குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமைக்கப்பட்டுள்ள மைய மதிப்பீட்டுக்குழுவில், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, நில நிர்வாகம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் ஆணையர்கள், இயக்குனர்கள் போன்ற அதிகாரிகள் உட்பட, தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதி மற்றும் மதிப்பீட்டாளர் சங்கப் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.