நாமக்கல் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 11 வயது பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நாமக்கல் காளிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (34). இவரது மனைவி கௌசல்யா (27). இவர்களுக்கு 11 வயது பெண் குழந்தை உள்ளது. இவர் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் மூவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில்,  சுமார் 2 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றதாகத் தெரிகிறது.


போலீசில் புகார்


இதனையடுத்து அதிகாலையில் கண்விழித்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தை காணாமல் போனது குறித்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 


தொடரும் விசாரணை 


மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையைக் கடத்திச் சென்றவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே குழந்தையின் பெற்றோரிடம் அந்தக் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது.கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதா? என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். முக்கியப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கடத்தல் காரர்களை நெருங்கிவிட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.