Greater Chennai Corporation: சென்னை முழுவதும் நடைபெற்று வரும் வடிகால் வாரியப் பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க  ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 


சென்னை முழுவதும் மொத்தம் ,1,055 கிலோ மீட்டருக்கு நடந்து வரும் மழநீர் வடிகால் வாரியப் பணிகளை வரும் செப்டம்பர் மாதற்திற்குள் முடிக்க சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னையில் செப்டம்பர் மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில் மாநகராட்சி மன்றமும் அதனை மீண்டும்  அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில், "கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதியைச் சேர்ந்த  8 நகராட்சி பகுதிகள், 9 பேரூராட்சி பகுதிகள் மற்றும் 25 ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்  கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கால கட்டத்தில் இந்தப் பகுதிகளில் குடிநீர் வசதிகள், சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள், மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை சீராக்கிட  ரூ.3,870 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான நிதி தமிழக அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்படிருந்தது.


2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில்  ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவால் கடந்த  10 ஆண்டுகளில் இந்த இணைக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க..ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து விதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைஉயர்த்திட  சிங்காரச் சென்னை 2.0 உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து தீவிரமாக  செயல்படுத்தி வருகிறார்.


இதனடிப்படையில் கடந்த காலங்களில் பருவமழையின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் நமக்கு பல்வேறு மோசமான அனுபவங்களை நமக்கு தந்தது. அதற்கு முன்னால் ஆட்சியாளர்கள் காரணம் எனச் சொல்லிவிட்டு செயல்படாமல் இருப்பதை தமிழ்நாட்டின் முதல்வர் விரும்பவில்லை. பெரும் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வெள்ள தடுப்பு மேலாண்மை குழு ஒன்றினை தமிழக அரசு அமைத்தது. தற்போது அந்தக் குழுவின் அறிக்கையின்படி சென்னை மாநகரில் பல்வேறு துறைகளுடன் இணைந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுமார் ரூ.4,749 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரம் முழுவதும் இதுபோன்று பணிகள் 1,055 கிலோ மீட்டர் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேயரும், மாநகராட்சி ஆணையரும் இந்தப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். வரும்  ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டும்  தொடர்ந்து பணிகளை கண்காணித்தும் வருகின்றனர்" என்று அவர் கூறியிருந்த நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு  அழுத்தம் தரப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண