சென்னை ராஜ்பவனில் 'எண்ணித்துணிக' என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில், இந்திய குடிமைப் பணி நேர்முக தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.


சமூக ஆர்வலர் தேவையில்லை


அதன்படி, யு.பி.எஸ்.சி. தேர்வில் எந்த மாதிரியான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என கேட்கப்பட்டதற்கு,  ”யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தான் தேடுகிறது. ஒரு சமூக ஆர்வலர் யு.பி.எஸ்.சி.க்கு தேவையில்லை. ஒரு விவகாரம் குறித்து என் கருத்தைக் கேட்டால் அதனை நான் தருவேன். ஆனால், இறுதி முடிவு எனது கருத்துக்கு எதிராக இருந்தாலும், அதனை அமல்படுத்துவது தான் என் கடமை. என் கருத்துக்கு எதிராக முடிவெடுத்த மேல் அதிகாரியின் முடிவின் மீது நான் கோபப்பட முடியாது” எனவும் ஆளுநர் விளக்கமளித்தார்.
 


பணமதிப்பிழப்பு நல்லது:


பணமதிப்பு நீக்கம் நல்லதா? கெட்டதா? என வினவியபோது,  ”உச்சநீதிமன்றம் சொன்ன சட்டப் புள்ளி விவரங்களை பார்த்தால் அது சரிதான் என்று உங்கள் பதில் இருக்கும். பணமதிப்பு நீக்கத்தின் தாக்கத்தில், சில வணிகங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக டிஜிட்டல் மற்றும் பல ஆன்லைன் வணிகங்கள் உருவெடுத்துள்ளன. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக நாடாக இந்தியா இப்போது உள்ளது. முடிவு எடுக்கும்போது, தற்காலிகமாக தவிர்க்க முடியாதது நடக்கும், சில எதிர்மறை அம்சங்களும் இருக்கும், நீண்ட காலத்தில், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கி, மிகப்பெரிய டிஜிட்டல் மொழிபெயர்ப்பு நாடாக மாற்றியுள்ளோம்” என  ஆளுநர் கூறினார்.


மத்திய அரசு சொல்வதை கேளுங்கள்:


இறுதியாக, மாநில அரசும், மத்திய அரசும் இரு வெவ்வேறு கருத்துகள் நிலவும்போது, என்னிடம் கருத்து கேட்கப்பட்டால் நான் யார் பக்கம் நிற்கவேண்டும் என தேர்வர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆளுநர்,  ”மாநில அரசு, மத்திய அரசு என்று வரும்போது சந்தேகமே இல்லை. இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே,  அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.


அரசின் முடிவை அமல்படுத்துவதே கடமை:


கலந்துரையாடலுக்கு முன்னதாக பேசிய ஆளுநர் ரவி , ”குடிமைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நீங்கள் பல அதிகாரிகளையும், மக்களையும் சந்திப்பவர்களாக இருப்பீர்கள். எனவே, சிரித்த முகமாக இருப்பதோடு, உங்களுடைய பர்சனாலிட்டி மிக முக்கியமானது.  ஆண்கள் கோட்சூட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். பெண்கள் எப்படியும் சேலை தான் அணிவீர்கள். சேலை அணியத் தெரியாதவர்கள் சீக்கிரம் அதற்கு பழகிக்கொள்ளுங்கள். உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நன்றாக கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பார்வை இருக்கும்.  உங்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை அமல்படுத்துவது மட்டும் தான் இந்திய குடிமைப் பணி அதிகாரியின் கடமை. இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி, ஒரு பிரபலம் கருத்து சொல்கிறார் என்பதால் அது உண்மையாக இருந்து விடமுடியாது. அவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அது அவருடைய பார்வை அவ்வளவு தான்” என ஆளுநர் பேசியுள்ளார்.