மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வரும் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 27 பணிமனைகளில் 21ஆம் தேதி முதல் பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டணமில்லாத டோக்கன் மூலம் 6 மாதங்கள் வரை பயணிக்கலாம் என்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 மாதங்களுக்கு இந்த டோக்கன்களைப் பயன்படுத்தலாம். 

இதுகுறித்து மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளில்‌ 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ்‌ மூத்த குடிமக்கள்‌ கட்டணமில்லாமல்‌ பயணம்‌ செய்யும்‌ வகையில்‌, கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள்‌ டிசம்பர்‌ 2022 (அரையாண்டிற்கு ஒரு முறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல்‌ ஜூன்‌ 2023 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள்‌ வீதம்‌, 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள்‌, அடையாள அட்டை புதுப்பித்தல்‌, புதிய பயனாளிக்கு வழங்குதல்‌ ஆகியவை கீழ்க்காணும்‌ 40 மையங்களில்‌, வரும்‌ 21 டிசம்பர்‌ 2022 முதல்‌ 31 ஜனவரி 2023 வரை காலை 08.00 மணி முதல்‌ இரவு 07.30 மணி வரை வழங்கப்படும்‌. அதன்‌ பின்னர்‌, 01.02.2023 முதல்‌ அந்தந்த பணிமனை அலுவலகத்தில்‌, அலுவலக நேரத்தில்‌ வழங்கப்படும்‌.

டோக்கன் பெறுவது எப்படி?

சென்னைவாழ்‌ மூத்த குடிமக்கள்‌, இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள்‌ மற்றும்‌ அடையாள அட்டைகள்‌ புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின்‌ நகலுடன்‌, வயது சான்றாக ஆதார்‌ அட்டை / ஒட்டுநர்‌ உரிமம்‌ / கல்வி சான்றிதழ்‌ / வாக்காளர்‌ அடையாள அட்டையின்‌ நகல்‌ மற்றும்‌ 2 வண்ண பாஸ்போர்ட்‌ அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்‌. 

சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட எதுவாக அவற்றின்‌ அசலை கையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. மேலும்‌, புதுப்பிக்க வரும்‌ மூத்த குடிமக்கள்‌, தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன்‌ தற்போதைய பாபோர்ட் அளவிலான ஒரு புகைப்படம்‌ மட்டும்‌ கொண்டு வர வேண்டும்‌''.

இவ்வாறு மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர் தெரிவித்துள்ளார்.