இன்பநிதியை முதலமைச்சர் ஆக்கிவிட்டு சாகணும் என்று கடலூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விபி ராஜன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது, கடலூர் புதுப்பாளையத்தில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட விபி ராஜன் பேசினார்.






அப்போது பேசிய அவர்,” திமுகவில் வாரிசு அரசியல் அது இது என்று சொல்கிறார்கள். ஆமா, வாரிசுதான். எனக்கு பிறகு என் பையன் தான் கொடியை தூக்கி பிடிப்பான். வேற யார் பிடிப்பா..? என் பிள்ளை என் கொடியை தான் பிடிப்பான். அமைச்சரான உதயநிதிக்கு திறமை உள்ளது, நாங்கள் அமைதியாக இருக்கிறோம். நாங்கள் ஒப்பு கொண்டோம். எங்கள் மரியாதைக்குரிய தளபதி மகன் உதயநிதி அமைச்சராக வந்திருக்கிறார். நாளை துணை முதல்வராக கூட ஆவார். இந்த கட்சிக்கு ஒரு பெரிய பொறுப்பு கூட வகிக்கலாம். ஆக அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர், உழைக்கிறவர்கள் முன்னேற்றம் அடைவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை மிஸ்டர் அண்ணாமலை. நீங்கள் என்ன செய்து கிழித்துவீட்டீர்கள். உங்க கூட ஒருத்தர் இருக்காரு. அவர் பேரு மோடி. அந்த மோடி மாதிரி உலகம் சுற்றவில்லை. ஒரு கட்சிக்காரன் வேஷ்டி கூட இல்லாமல் இருப்பான். ஆனால், கழகத்தில் கொடியை தூக்காமல் இருக்க மாட்டான். 


திமுக தொண்டர் உண்மையில் கஷ்டம்தான் படுறான். கழகம் தான் கலைஞர்.. கலைஞர் தான் கழகம் என்று கருத்து வேறுபாடு கொள்ளாமல் கழக கொடியை தூக்கி பிடிப்பவர்கள்தான் திமுக தொண்டர்கள். அதன் விளைவுதான் எங்கள் தளபதி முதலமைச்சர். அதன் விளைவுதான் எங்கள் இளையவர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர். நாளைக்கு எங்களுக்கு ஒரு ஆசை இருக்கு. அதுவரை நான் உயிரோட இருப்பேன்னான்னு தெரியல. 


எனக்கு ஒரு ஆசை. அய்யா இன்ப அய்யாவையும் அடுத்து முதலமைச்சர் ஆகிட்டு சாகணும். அந்த குடும்பம் தவிர வேறு யாரும் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க. அந்த குடும்பம்தான் அதுக்கு சரியாக வரும். ஆக, இன்பநிதி யார் என்றால் உதயநிதி பையன். எங்கள் தளபதி முக ஸ்டாலின் பேரன். அவரும் இந்த நாட்டுக்கு முதலமைச்சராக வருவார். நான் கூட சொல்றேன் ஈரோட்டில் மாநாடு, அப்போ ரஜினி காந்த் சொல்றாரு.. திமுகவில் வெற்றிடம் ஆகிவிட்டது என்று. அப்ப தளபதி உட்கார்ந்து இருகாங்க.. நான் நின்னுட்டு இருக்கேன். 


அப்போது, நான் பேசினேன் திமுகவில் ரஜினி காந்த் வெற்றிடம் வெற்றிடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எங்கே வெற்றிடம் என்று காமியுங்கள். முதலில் கலைஞர், அதன் பிறகு தளபதி ஸ்டாலின், தளபதிக்கு பிறகு எங்கள் அய்யா உதயநிதி ஸ்டாலின். இது ஒவ்வொரு தொண்டனுக்கு நெஞ்சில் ஊறிப்போன ஆசை. அடுத்து எங்கள் இன்பநிதி வருவார். அந்த நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம்” என அவர் பேசினார். இந்த நூற்றாண்டு நிறைவு விழா  பொதுக்கூட்டத்தில் கழக பேச்சாளர் பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.