முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பெண் சுமிதா, 23-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக கூறி  8-ஆம் தேதி பிரேதமாக கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியிருப்பதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார், இதில் ஒரு பெண் மட்டும் குற்றவாளி என கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.



திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு நிலவிவருவதாகவும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வால்  கட்டுமான தொழில் முடங்கிருப்பதாகவும் கூறிய அவர், டெல்லி செல்லும் முதல்வர், ”நிலுவையில் உள்ள 4 ஆயிரம் கோடி வாட் வரி இழப்பீட்டை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்ற ஜெயக்குமார், ”ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?” என கேள்வி எழுப்பினார்.


தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்ற பலகையை ஆங்காங்கே காண முடிகிறது,  தடுப்பூசி இல்லை என சொல்ல ஒரு அரசாங்கமா? என்ற கேள்வி எழுப்பிய அவர், எங்களுடைய ஆட்சி காலத்தில் கொரோனா உட்சபட்சமாக 7 ஆயிரம்தான் இருந்தது, தற்போது ஏறுமுகத்திற்கு சென்று இறங்கியும் 15 ஆயிரம்தான் உட்சபட்சமாக உள்ளது என்றார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி  அதிமுகவுடன் உறவு கொண்டாட முடியும் என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்,  இந்த சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வெற்றிகரமான தோல்விதான் இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ வெளியிடுவதாக குற்றம்சாட்டினார். எங்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து பிளவுபடுத்தி கட்சியை கைப்பற்றலாம் என நினைத்தால் அது நடக்காது என்று கூறியுள்ளார்.


அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து புகழேந்தி  நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ”எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, ஆனால் ஒரு கட்சி சார்ந்து பேசும்போது நாம் எது வேண்டுமானலும் பேசி விட முடியாது” என்ற அவர், கட்சியை ஏற்காதவர்கள், கட்சிக்கு விரோதமானவர்கள் உடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் புகழேந்தி நீக்கப்பட்டார் என கூறினார். சசிகலா மற்றும் அவர்களை சார்ந்தவர்களுடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என தீர்மானம் உள்ள நிலையில் அதனை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாததாகிவிடும்” என்று கூறினார். “கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும்” என எச்சரித்துள்ளார்.


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும், உடனடியாக உண்மை வெளிவர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமும், எதற்காக ஆணையம் அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவேண்டும் என தெரிவித்தார்.