தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாக மாவட்டந்தோறும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கட்சியும், அரசும் தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதல் இருக்கக்கூடாது. இணைந்தும் போய்விடக்கூடாது. தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றார் அண்ணா. அவரின் பொன்மொழிக்கு முற்றிலும் முரணான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தத்திற்கு உரியது.


தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, 18 வயது முதல் 44 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி முகாமில், தடுப்பூசியின் இருப்பை கணக்கில் கொண்டு, கொரோனா பாதிப்புக்கு ஆளாக்கூடிய தொழிலாளர்களான செய்தித்தாள் போடுபவர்கள், பால் விற்பனையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், மின்வாரிய பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து கடந்த மே 22-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.




இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட லக்காபுரத்தில் மே 27-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப் பணியாளர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தடுப்பூசி முகாமிற்கு சென்றதாகவும், ஆனால் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், பக்கவாட்டு வழியாக தி.மு.க. பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், முகாமிற்கு வெளியே நின்றிருந்த முன்களப்பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் முன்களப் பணியாளர்களை அலைக்கழிப்பதுடன், கொரோனா பரவல் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது. இதுமட்டுமில்லாமல், தமிழக முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க.வினரின் இந்த செயல் குந்தகம் விளைவிப்பது போல் உள்ளது.






எனவே, தடுப்பூசியின் இருப்பிற்கு ஏற்ப, ஒவ்வொரு பகுதியில் உள்ள முன்னுரிமைப் பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல்துறையினரின் உதவியுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். 


மேலும் படிக்க : https://tamil.abplive.com/videos/news/cm-stalin-talks-to-the-public-over-phone-call-to-address-queries-4380/amp