பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற தினம் பாஜக தேசிய தலைமை சார்பில் ஸேவா தினமாக அறிவிக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் பாஜகவினர் நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரையில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், 8-வது ஆண்டில் மத்திய அரசு  அடியெடுத்து  வைக்கும் இந்த தினத்தை சேவை தினமாக கொண்டாடி வருவதாகவும், 7 வருடமாக பிரதமர் மோடி சிறந்த ஆட்சியை நடத்தி வருவதாகவும் பல்வேறு மக்கள் நலன்  திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். கொரோனா தடுப்புப் பணிகளில், திமுக அரசு தவறான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஊரடங்கு போடுகிறோம் என்று தவறான நடவடிக்கையை எடுத்து, தமிழக அரசு கொரோனாவை பரப்பியதாக குற்றம்சாட்டினார்.


சென்னை துறைமுகத்தில் வடமாநிலத்தவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள் என்று பிரித்து ஓர் அமைச்சர் பேசுவது தவறானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர் சேகர்பாபு பேசியது தவறு என்ற எல்.முருகன். திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் இன்று தடுப்பூசி இல்லை என்று கூறும் திமுகதான் தடுப்பூசி குறித்த சந்தேகத்தை முன்பு எழுப்பியதாக குறிப்பிட்டார். தடுப்பூசிகள் வர வர அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு விநியோகம் செய்துவருவதாகவும். தமிழகத்திற்கு மத்திய அரசு தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வழங்கும் தடுப்பூசிகளை தமிழகஅரசு முறையாக பயன்படுத்துவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.


கோவை, சேலம் மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை வழங்காமல் திமுக அரசு புறக்கணிப்பதாகவும் அனைத்து பகுதிகளிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். லட்சத்தீவில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், மேற்கு வங்கத்தில் பட்டியலின மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறித்து ஏன் இங்குள்ளவர்கள் பேசவில்லை எனவும் லட்சத்தீவில் ஆயுதக் கடத்தல் நடந்திருப்பதாகவும் தேசப் பாதுகாப்பை முன்வைத்தே, பல்வேறு சட்டங்களை லட்சத்தீவில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் விளக்கமளித்தார்.



PSSB பள்ளி பாலியல் அத்துமீறல் தொடர்பாக யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்ற எல்.முருகன், அரசு பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்கிறது அதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.