ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் அவருடை அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த குடியிருப்பான வேதா நிலையம் இல்லத்தினை நினைவுச் சின்னமாக மாற்றப்படும் என்று முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணை வெளியிட்டதோடு, இந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. இதன் மூலம், ஜெயலலிதா குடியிருப்பு அரசின் சொத்தாகியது. வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நகர  நீதிமன்றத்தைநாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 


இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின்  அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி விசாரித்து வந்தார். தங்கள் மனுவில், "காலஞ்சென்ற ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்ந்த குடியிருப்பை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். குடியிருப்பை, நினைவில்லமாக மாற்றவும் தடை விதிக்க வேண்டும். 




மேலும், ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில், தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர நீதிமன்றத்தில்  வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு சட்டத்திற்கு எதிரானது" என்று தெரிவித்திருந்தனர்.  வழக்கின் அனைத்து வாதங்களையும் விசாரித்த நீதிபதி சேஷசாயி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். 


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை(Vedha Illam) அரசுடைமையாக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம், மூன்று வாரங்களில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் வேதா நிலையத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.  


அதன்படி தற்போது வேதா இல்லத்தை தீபா தீபக்கிடம் அரசு ஒப்படைத்துள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் சாவியை ஆட்சியர் விஜயராணி ஒப்படைத்தார். சாவி ஒப்படைக்கப்பட்டதையடுத்து வேதா நிலையத்தில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தீபா. மேலும் இதுகுறித்து அரசு மேல்முறையீடு செய்தாலும் சந்திக்க தயார் என தீபா தெரிவித்துள்ளார். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண