வழக்கு விவரம்:


சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில், ”சிங்கம்புணரி அடுத்த மலைக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சண்டி வீரன் மற்றும் பெரிய கோட்டை முத்தையனார் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாளை முன்னிட்டு, அந்த கோயில்களில் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படும். அந்த சமயங்களில், யாருக்கும் முதல் மரியாதையோ, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்படாது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் ஒருவர் தனக்கு முதல் மரியதை செய்ய வேண்டும் எனவும், சிறப்பு மரியாதை செய்யுமாறும் கோரி வருகிறார்.


விழாவில் கையில் கொடியை ஏந்தியவாறு, தனது அடியாட்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்கிறார். அவரது செயல்பாடுகள் ஏற்கத்தக்கது அல்ல என்பதால், மலைக்கோட்டை கிராமத்தில் நடைபெற்று வரும் தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது  குறிப்பிட்ட நபர் தனது ஆட்கள் மூலம் பரிவட்டம் கட்டிக் கொண்டு, கையில் கோலுடன் குடைபிடித்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி பங்கேற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.


முதல் மரியாதை கூடாது:


இந்த வழக்கு நீதிபது சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ”இதுபோன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு  புதியது அல்ல. கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு வழக்கு வந்தபோதும், நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. கோயிலில் யாருக்கும்  முதல் மரியாதை வழங்குவதோ,  தலைப்பாகை அணிவிப்பதோ கூடாது. அதோடு, தனிநபருக்கு குடை பிடிப்பது மற்றும் வேறு ஏதேனும் அடையாளங்களால் ஒருவரின் அந்தஸ்தை உயர்த்தி காட்டுவது ஆகிய செயல்களிலும் ஈடுபடக்கூடாது. தங்களது அந்தஸ்தை சிறப்பை காட்டிக்கொள்வது போன்ற அடையாளங்கள் இருக்கக் கூடாது. சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. அனைத்து பக்தர்களும், கிராம மக்களும் சமாமாகவும், சம மரியதையுடன் நடத்தப்பட வேண்டும். விழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு”, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.