கட்டுமான நிறுவனம் , ரூ.19.48 லட்ச ரூபாய் திருப்பி தர ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் செலைன் எஸ்டேட்ஸ் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு வாங்க , பல்லவி என்பவர் 2019 - ல் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் 19.48 லட்ச ரூபாயை கட்டுமான நிறுவனத்திடம் செலுத்தி உள்ளார். ஆனால் ஒப்புக் கொண்ட காலக் கெடுவுக்குள் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை.
இது குறித்து பல்லவி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார். ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் ,
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதனால் பணத்தை திரும்ப பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. எனவே மனு தாரர் செலுத்திய 19.48 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும். உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 60 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் பணத்தை திருப்பித்தர வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நவீன தொழில் நுட்பத்துடன் மேம்பாலம் பணி
சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.20 கி.மீ.,க்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. நாட்டிலேயே முதல் முறையாக மெட்ரோ ரயில் சுரங்கத்திற்கு மேல் நவீன தொழில் நுட்பத்துடன் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது.
துாண்கள் மற்றும் ஓடு தளத்தை தாங்கும் கட்டமைப்பை இரும்பை பயன்படுத்தியும். ஓடுதள கட்டமைப்பு முன்வார்ப்பு செய்யப்பட்ட காண்கிரிட் பயன்படுத்தியும் அமைக்கப்படுகிறது. துாண்கள் தயாரிக்கும் பணிகள் , குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேம்பாலத்தை ஜனவரி மாதத்திற்குள் போக்குவரத்துக்கு திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே பணிகளை விரைத்து முடிப்பதற்காக ஓடுதளத்தை தாங்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை ஹைதராபாதில் உள்ள தொழிற்சாலைக்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு , செயலர் செல்வராஜ் , முதன்மை பொறியாளர் சத்திய பிரகாஷ் , கண்காணிப்பு பொறியாளர் சரவண செல்வம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு கூறுகையில் ,
மேம்பால கட்டுமானத்திற்கு மொத்தம் 15,000 டன் இரும்பு பயன்படுத்தப்படவுள்ளது. ஹைதராபாதில் உள்ள தொழிற்சாலையில் மட்டும் 3,400 டன் இரும்பை பயன்படுத்தி கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளது. முன் தயாரிப்பு கட்டு மானங்கள் தயாரான பின் , கனரக வாகனங்களில் அவை எடுத்து வரப்பட்டு மேம்பால பணிக்கு பயன்படுத்தப்படும் என்றார்.