நாகையில் இருந்து இலங்கைக்கு இம்மாதம் 10ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. ஒரு நபருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் 6500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கொச்சினில் தயாரிக்கப்பட்ட "சிரியாபாணி" என்ற பெயரிடப்பட்ட கப்பல் 7 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது.

 

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. பின்னர் கடந்த மாதம் 20 ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து  குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், நாகை துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.



 

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 6500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும். இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட "சிரியா பாணி" என்ற கப்பலில் 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை  நாகை துறைமுகம் வர உள்ள கப்பலின் சோதனை ஓட்டம் 8 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய உள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 10ம் தேதி தொடங்க உள்ளது. KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துள்ளது. துறைமுக நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கை நாட்டிற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.