சித்திரை திருவிழா போல் தை மாதம் பொங்கல் பண்டிகையை தென் மாவட்ட பகுதி மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கூடுதல் சிறப்பாக இருக்கும்.  தை முதல் நாள் அவனியாபுரத்திலும் அடுத்த, அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டு முழு ஊரடங்கு காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும் ஒரு நாள் தள்ளி வைத்து நடத்தப்பட்டது.



 

கடந்த 17 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகள் நடைபெற்றது. இதில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். கருப்பாயூரணி கார்த்திக் என்ற இளைஞர் முதல் பரிசையும், இரண்டாவது பரிசை அலங்காநல்லூர் ராம்குமாரும்,  மூன்றாவது பரிசை சித்தாலங்குடி  கோபால கிருஷ்ணனும் தட்டிச்சென்றனர்.



 

இந்நிலையில் மூன்றாம் பரிசு பெற்ற 24 வயதுடைய இளைஞர் கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம்ம், ’’பி.காம் முடித்துவிட்டு ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறேன். எனக்கு ஜல்லிக்கட்டு மீது பெரிய ஆர்வம் இருந்ததில்லை. 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தான் எனக்கு ஜல்லிக்கட்டு போட்டியின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எங்கள் கிராமத்தினருடன் இணைந்து நகரி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சாலை மறியல், போரட்டத்தில் ஈடுபட்டோம்.  சாலை மறியலில் ஈடுபட்ட எங்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பொய் வழக்கு தொடர்பாக 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம்.



 

இதனால் ஜல்லிக்கட்டு மீது ஆர்வம் அதிகமானது. இதனால் மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறேன். என்னுடைய காளைகள் பல்வேறு இடங்களிலும் பரிசுகள் பெற்றுவருகிறது. நானும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிக்க பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். இந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 13 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளேன். கிட்டதட்ட 20 காளைக்கு மேல் பிடித்தேன். ஆனால் அதற்கு முறையாக மாடுபிடி என்று அறிவிக்கவில்லை. அதே போல் மாடுபிடி சுற்றுகளிலும் குறைவான வாய்ப்பு தான் கொடுக்கப்பட்டது. ஆர்.ஐ தாசில்தாரிடம் பேசியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் மனசை தேர்த்திக் கொண்டு மாடுகளை பிடித்தேன். இதனால் 13 மாடுகள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு மூன்றாம் இடம் பிடித்து பைக் பரிசாக வென்றுள்ளேன்.



 

ஜல்லிக்கட்டு மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்ட  அதே சமயம் காவல்துறை பணியில் சேர வேண்டும் என போட்டித் தேர்வுக்கு படித்து வருகிறேன். எஸ்.ஐ ஆகவேண்டும் என்பது தான் என்னுடை லட்சியம்.  ஜல்லிக்கட்டு போரட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பாக என் மீது பொய் வழக்கு உள்ளதால் பணியில் சேர சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலரிடம் மனு கொடுத்து வருகிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தால் கூட வழக்கு தள்ளுபடியாயிருக்கும், அரசு வேலையில் சேர்ந்திருப்பேன். பொய் வழக்கு என்பதால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொண்டேன். எனவே தமிழ்நாடு அரசு இதை கவனித்தில் எடுத்துக் கொண்டு என்மீதுள்ள பொய் வழக்கை நீக்க  நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.