தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றுவதை ஏற்க முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  நாராயணசாமி வெளியிட்டுள்ள சமூகவலைத்தள வீடியோ பதிவில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். ஆனால் அவர் புதுச்சேரி மாநில முழு நேர ஆளுநர் போல செயல்பட்டு வருகிறார். குடியரசு தினத்தன்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த அந்தமான் நிகோபார் தீவு கவர்னர் மத்திய உள்துறையின் அனுமதி பெற்று குடியரசு தினத்தன்று புதுச்சேரி முதலமைச்சர் தேசியக்கொடி ஏற்ற அனுமதி பெற்றார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரந்த மனதுடன் புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும் ஆனால் இதனை ஆளுநர் செய்ய தவறிவிட்டார்.




 


இந்திய சரித்திரத்தில் ஒரு மாநிலத்தின்  ஆளுநர் 2 இடங்களில் தேசிய கொடியேற்றியதாக சம்பவம் நடைபெறவில்லை. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை    ஏற்று வதற்கு உரிமை உள்ளது. அதே சமயத்தில் இரு மாநிலங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட   அரசுக்கு  அவப் பெயரை தரும். இதனை சுட்டிக் காட்ட காரணம் மத்திய அரசு புதுச்சேரிக்கு ஆளுநரை நியமிக்காதது தான். ஆளுநரை நியமித்து இருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.


முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த எந்த திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவற்றை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை என காரணம் கூறுகிறார்கள்.  மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவும்   அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரியில்  ஆளும் அரசு டம்மியாக செயல்படுகிறது. அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருகிறார். இதனால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.


 


.


புதுச்சேரி மக்களுக்கு தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி ஆட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக சீரழிந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரத்தை தன் கையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் புதுச்சேரியை ஆள லாயக்கற்ற முதலமைச்சர் என மக்கள்   தீர்மானித்து  விடுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து முதலமைச்சர் எழுந்து புதுச்சேரி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண