கொடநாடு பிரச்சனையை கையில் எடுத்த ஓபிஎஸ் - பதிலடி கொடுத்த ஜெயக்குமார்

”கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு தான். கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் ஓராண்டாக விசாரணை நடைபெறவில்லை”

Continues below advertisement

அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கில் விசாரணைகள் முடிந்து தீர்ப்பு வழங்கும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் ஐஜி விசாரித்து வந்த வழக்கை, ஏன் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு மாற்ற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Continues below advertisement

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், , “ கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசின் கடமையாகும். அதனை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். தீவிர விசாரணையில் இந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் யார் என்பது தெரிய வரும். கோடநாடு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றது என்றார். கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு என்ற ஜெயக்குமார், கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் ஓராண்டாக விசாரணை நடைபெறவில்லை. அதன்பிறகு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க கூடிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது" என்றார். 

முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்படி, மேற்கு மண்டல காவல்துறை ஐஜி தலைமையில் கொடநாடு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது என்றும், 90 சதவீதம் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், வழக்கு திடீரென சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார். தற்போது கொடநாடு வழக்கை உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரித்து வருவதாக குறிப்பிட்ட ஜெயக்குமார், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி விசாரித்து வந்த வழக்கை, அவருடைய குறைந்த அந்தஸ்து கொண்ட போலீசாருக்கு மாற்ற காரனம் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன..? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடுவதாக சாடினார். 

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதாக கூறியதுடன்,  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டும் மிரட்டும் திமுகவின் மாய வித்தைக்கு அதிமுக அஞ்சாது என்றார். இறுதியாக அதிமுக ஆட்சிக்கு வந்ததும் எல்லாத்துக்கும் பதிலடியாக மறுவிசாரணை நடத்தப்படும் என்றார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola