OPS criticize EPS: “நம்பிக்கை துரோகி இபிஎஸ்; தொண்டர்கள் யோசிக்கும் நேரம் வந்துவிட்டது” - ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கடும் தோல்வியடைந்ததை தொடர்ந்து கண்டனம் தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ. பன்னீர்செல்வம் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

அதில் தெரிவித்துள்ளதாவது,  

மாபெரும் மக்கள் இயக்கத்தினை, தொண்டர்கள் இயக்கத்தினை உருவாக்கிய எம்.ஜி.ஆர்-ன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும்; கழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற  ஜெயலலிதாவின் புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


”தி.மு.க. அரசின் மீது மிகுந்த அதிருப்தி”

பல காரணங்களால் பொதுமக்கள் தி.மு.க. அரசின் மீது மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்ற நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பினை பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் கழகத்திற்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள்தான்.

”மக்களால் வெறுக்கப்படுவான்”

இவ்வற்றைப் பார்க்கும்போது, "பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை, பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன். மக்களால் வெறுக்கப்படுவான்.” என்ற அண்ணாவின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு காரணம் துரோகியின் தலைமை:

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், ஓர் இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத்தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்.  

எம்.ஜி.ஆர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்ற அறிவுரையை நாம் ஏற்றுக் கொண்ட நிலையில்; உச்ச நீதிமன்ற அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து தன்னிச்சையாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து, அந்த வேட்பாளரின் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியபோது, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருந்தும், “இரட்டை இலை' சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னற்றக் கழகம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதற் காரணம் எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

தொண்டர்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம்:

'தான்' என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, ஜெயலலிதா அவர்களால் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் அடையாளம் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. நீதியும், நேர்மையும் தவறாமல், நடுநிலையோடு சிந்தித்து, நர்மத்தின் பக்கம் நிற்கும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், ஜெயலலிதாவின் தொண்டர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம் இது.

எப்போதும் இல்லாத வகையில் தொடர் தோல்விகளால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிற தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, நடுநிலைமையோடு எல்லோரையும் அரவணைத்து கழகத்தை மூத்தத் தலைவர்கள் முன்னின்று நடத்துவதுதான் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலிலாதாவுக்கும் நாம் செய்கிற நன்றிக் கடன் ஆகும்.

நாற்பது இடங்களிலும் வெற்றி:

கழகத் தொண்டர்களின் ஆதரவோடு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக வழியில், கட்சியின் அடிப்படை சட்ட திட்ட விதிகளைக் காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து, எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு ஜெயலிலாதா ஆகியோரின் வழியில் கட்சியை வழி நடத்திச் செல்லவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் கழகம் வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola