கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.பி.அன்பழகன். இவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது உறவினர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரது வீடு மற்றும் அலுவலகங்கள் என சென்னை உள்பட அவருக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் ரூபாய் 2.87 கோடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு நிதிமுறைகேடு மூலமாக தனது பெயரிலும், தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களிலும் பல்வேறு சொத்துக்களை தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலும் வாங்கியுள்ளதாகவும், இதுசம்பந்தமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்திற்கு தான் அனுப்பிய மனுவின் பெயரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனருக்கு உத்தரவிடுமாறு கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர்) தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக 27.4.2016ம் ஆண்டு முதல் 15.3.2021ம் ஆண்டு வரையிலான காலத்தில் தன் பெயரிலும், தனது குடும்பத்தினர் மற்றும் பிற நபர்களின் பெயர்களிலும் வருமானத்திற்கு அதிகமான ரூபாய் 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 சொத்து சேர்த்தாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, அவரது மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது தருமபுரி மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு பிரிவு 13(2) 13(1) உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 58 இடங்களில் (தருமபுரி மாவட்டத்தில் 53, சேலத்தில் 1 இடம், சென்னையில் 3 இடங்கள், தெலுங்கானா மாநிலத்தில் 1 இடம்) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டத. இந்த சோதனையில் ரூபாய் 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650, தங்கநகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூபாய் 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650, வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.”


இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது. 


சோதனை நடைபெற்ற கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் குவிந்த அவரது ஆதரவாளர்கள் சிலர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண