முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து, அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது மணல் கடத்தல் வழக்கு உள்ளிட்ட மேலும் சில வழக்குகள் பாய வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அமைச்சராக இருந்த 8 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளார் என்ற அடிப்படையில் வந்த புகாரை அடுத்து அவர் மீது செப்டம்பர் 15 ஆம் தேதி வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து.  நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நள்ளிரவு 11 மணியை கடந்தும் கே.சி.வீரமணியின் இடையம்பட்டி வீடு, அவரது உறவினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 



 

சென்னை, ஜோலார்பேட்டை, குடியாத்தம், வேலூர் மாவட்டம் வெட்டுவாணம், அரக்கோணம், ஏலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் குருவிமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு என 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனையில் 34 லட்சத்து ஆயிரத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 1.80 லட்சம் இந்திய மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்கள், ரோல்ஸ் ராய்ல்ஸ், மினி கூப்பர் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், 623 கிராம் (5 கிலோ) தங்க நகைகள், 7.2 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வங்கி பாஸ் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் ஜோலார்பேட்டை வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் கைப்பற்றப்பட்டன. தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள சொத்துக்களை கே.சி.வீரமணி 2011, 2016  மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் நின்ற போது வேட்பு மனுவில் இணைத்த சொத்து விவரங்களுடனும், சேமிப்பு, அசையும் சொத்துகள்  விபரங்களுடன் வைத்து ஒப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 



 

மேலும், 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் தனது சகோதரர்களுடன் இணைந்தும், தனியாகவும் நடத்தி வந்த பீடி நிறுவனம் மற்றும் லாரி தொழிலில் கிடைத்த வருவாய் தொடர்பான விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் வீரமணியால் நேரடியாகவும் மறைமுகமாகவும்  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது அதிமுக கட்சியை சார்ந்த சிலருமே, லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு அவர் தொடர்பான ஊழல் புகார்களை அனுப்பி வைக்கவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



 

அதேநேரம், கே.சி.வீரமணியின் வீட்டின் பின்புறம் கைப்பற்றப்பட்ட 30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் குறித்தும் நேற்று முன்தினமே வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுரங்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது மணல் கடத்தல் வழக்கும் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையை தொடர்ந்து அவருக்கு சொந்தமான வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறை முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று வீரமணி பயன்படுத்திய அனைத்து வங்கிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் கே.சி.வீரமணி மற்றும் உறவினர்கள் பயன்படுத்திய வங்கி பெட்டகங்களுக்குச் சீல் வைக்க முடிவுசெய்துள்ளனர் . அவற்றை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திறந்து சோதனை நடத்தவும்  முடிவு செய்துள்ளனர் .