கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை விமானநிலையத்தில் சா்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் பயணிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடின.உள்நாட்டு விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இன்று 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சா்வதேச விமானநிலையத்தில் இன்று 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.


சென்னை சா்வதேச விமானநிலையத்தில் வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் மற்றும் சிறப்பு விமானங்கள் தினமும் 20 க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று 3 வந்தே பாரத் விமானங்கள் உட்பட 10 விமானங்கள் மட்டுமே வருகின்றன.அதிலும் மிகவும் குறைவான பயணிகளே வருகின்றனா்.




அதேபோல் சென்னை  உள்நாட்டு விமானநிலையத்திலும் இன்று மிகவும் குறைவான விமானங்களே இயக்கப்படுகின்றன. அதன்படி இன்று  50  புறப்பாடு விமானங்கள்,49 வருகை விமானங்கள் மொத்தம் 99  விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில் சென்னைக்கு வரும் விமானங்களில் சுமாா் 2 ஆயிரம் பயணிகளும், இங்கிருந்து புறப்படும் விமானத்தில் 4500 பயணிகளும் பயணிக்க உள்ளனர். சென்னையிலிருந்து புறப்படும் விமானத்தில் 2 ஆயிரம் போ் ஊரடங்கு காரணமாக வட மாநிலங்களுக்கு தங்கள் சொந்த ஊா் திரும்புபவா்கள்.


கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் விமான நிலையத்தின் உள்நாட்டு பிரிவில் வருகை,புறப்பாடு என மொத்தமாக 270 விமானங்கள் வரை இயக்கப்பட்டன. மேலும் அப்போது பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரம் வரை இருந்தது. தற்போது அதை காட்டிலும் பயணிகள் எண்ணிக்கையும்,விமானங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு குறைந்து விட்டது. இவை தவிர சென்னை உள்நாட்டு விமானத்தில் இன்று 104  விமானங்கள் பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதில் 50  விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுபவைகள்,54 விமானங்கள் சென்னைக்கு வரும் விமானங்கள்.




பயணிகள் இல்லாததால்  2 அல்லது 3 விமானங்களின் பயணிகள் இணைக்கப்பட்டு ஒரே விமானமாக சென்றது.சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூா் சென்று அல்லது ஹைதராபாத் சென்று டில்லி செல்கிறது. அதைப்போல் சில விமானங்கள்  சென்னையிலிருந்து புறப்பட்டு கொச்சி வழியாக மும்பை செல்கிறது.


ஏற்கனவே பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் விமான சேவை மட்டும் இருந்தது. தற்போது அதற்கும் ஆட்கள் வருகை இல்லை என்பதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் செயல்பட்ட ஒரே போக்குவரத்தான விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா அச்ச உணர்வே பயணிகள் வருகை குறைவாக காரணம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்கும் என்பதால் அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருக்கும் விமானங்களும் ரத்து செய்யும் சூழல் உருவாகலாம்.