தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி என பரவலாக பேசப்படும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.,க்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. பொதுமக்களோடு என்றும் தன் உறவை புதுப்பிப்பவர் என்பதால், அவர் அவர்களிடத்தில் நன்கு அறியப்படுகிறார். இருப்பினும், அவர் கடந்து வந்த பாதையை நினைவூட்ட விரும்புகிறோம். 


 


கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி சைலேந்திரபாபு பிறந்தார். குழித்துறையில் உள்ள அரசுப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர பாபு சிறுவயது முதலே விவசாயத்தின் மீது தீராத காதல் கொண்டவர். இந்த ஆர்வத்தின் காரணமாக மதுரையில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் விவசாயம் மற்றும் அறிவியல் படிப்பில் சேர்ந்து இளங்கலை பட்டமும் பெற்றார்.


கடைசி பெஞ்ச மாணவன்!


கல்லூரி காலத்தில் அனைத்து மாணவர்களை போல கடைசி பெஞ்ச் மாணவராக இருந்த சைலேந்திரபாபு, ஒரு நாள் தனது கல்லூரியில் சிறப்புரையாற்றிய ஒருவரின் பேச்சில் ஈர்க்கப்பட்டு இனி “காவல்துறைதான் தன்னுடைய பாதை” என்று தீர்மானித்தார். இதை சைலேந்திரபாபுவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.




இதையடுத்து, அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொதுச்சட்டம் பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், மக்கள் தொகை கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றார் சைலேந்திரபாபு. காவல்துறைதான் தன்னுடைய பாதை என்று தீர்க்கமாக தீர்மானித்த பிறகு, விடா முயற்சி மற்றும் கடினமாக உழைப்பு ஆகியவற்றின் மூலமாக 1987ம் ஆண்டு தனது 25வது வயதில் இந்திய காவல்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.


அடுத்தடுத்த பதவி உயர்வுகள்!


ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற பிறகு, ஹைதராபாத் காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு 1989ம் ஆண்டு கோபிச்செட்டிபாளையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக (ஏ.எஸ்.பி.)யாக தனது காவல்துறை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றினார்.


இதையடுத்து, 1992ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டார். அவரது சிறப்பான பணி காரணமாக சிவகங்கை, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பாளராக சைலேந்திராபுவை அப்போதைய அரசு நியமித்தது. பின்னர், சென்னையில் உள்ள அடையாறில் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்று சில காலம் பணியாற்றினார்.




2001ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று விழுப்புரத்திலும், 2006ம் ஆண்டு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னையிலும் பணியாற்றினார். 2012ம் ஆண்டு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற சைலேந்திரபாபு திருச்சியில் டி.ஐ.ஜி.யாகவும், கரூர் தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். சிறப்பு காவல்படையின் ஐ.ஜி,யாக பணியாற்றிய சைலேந்திர பாபுவை, தமிழக அரசு கோவை மாநகர ஆணையராக நியமித்தது. கோவை மாநகரா ஆணையராக அவர் பணியாற்றியபோது, பள்ளி மாணவர்களின் நலன் கருதி கோவையில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கணினிப்பயற்சி குறித்தும், தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 2019ம் ஆண்டு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற சைலேந்திர பாபு தற்போது ரயில்வே துறையின் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார்.


மாணவர்களின் எழுச்சி நாயகன்!


காவல்துறையின் அயராத பணிகளுக்கு இடையிலேயும் மாணவர்களின் கல்வி நலனில் அதிக அக்கறையுடன் சைலேந்திரபாபு செயல்பட்டு வருகிறார். நல்ல காவல்துறை அதிகாரியாக மட்டுமின்றி, முன்னேறத் துடிப்பவர்களுக்கு உந்துசக்தி அளிக்கும் விதமாக  “சிந்தித்த வேளையில்”, “உனக்குள் ஒரு தலைவன்”, “உங்களுக்கான 24 போர் விதிகள்”, “அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்”, “உடலினை உறுதி செய்”, “சாதிக்க ஆசைப்படு”, “You too can become IPS officer”, “நீங்களும் ஐ,பி.எஸ். ஆகலாம்” என தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.


இதுமட்டுமின்றி கல்லூரிகள், பள்ளிகளுக்கு பல முறை நேரில் சென்று மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக பல முறை தன்னம்பிக்கை உரை ஆற்றியுள்ளார். மேலும், ஐ.பி.எஸ். ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறத்துடிப்பவர்கள் பலருக்கும் உத்வேக உரையும் பலமுறை அளித்துள்ளார். பதவி உயர்வுகள் எத்தனை பெற்ற போதிலும், கல்வியின் மீது தீராத தாகம் கொண்ட சைலேந்திர பாபு 2013ம் ஆண்டு தனது “missing children” என்ற ஆய்வுக்கட்டுரைக்காக சென்னை பல்கலைகழகத்தின் முனைவர் பட்டத்தை பெற்றார்.




விளையாட்டு வேங்கை!


பொறுப்பான காவல்துறை அதிகாரி, தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர் என்ற பொறுப்புகளுக்கு இடையில் தான் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பதையும் சைலேந்திர பாபு நிரூபித்துள்ளார். 2004ம் ஆண்டில் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய முதுநிலை அத்லெட் போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டார். சென்னை, கோவையில் நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் மாராத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 32 நாட்கள் சைக்கிளிலே சென்று சாதனை படைத்துள்ளார். தேசிய போலீஸ் அகாடமி நடத்திய நீச்சல் போட்டிகளில் “ஆர்.டி.சிங்” கோப்பையை வென்றுள்ளார்.


குவிந்த பதக்கங்கள்!


காவல்துறையில் தனது நேர்மையான பணிக்காக பதவிகள் மட்டுமின்றி ஏராளமான பதக்கங்களையும் சைலேந்திரபாபு குவித்துள்ளார். 1993ம் ஆண்டு நக்சலைட் என்கவுண்டருக்காக வீரப்பதக்கத்தையும், கடலூரில் சாதிக்கலவரத்தை வெற்றிகரமாக தடுத்ததற்காக 2000ம் ஆண்டில் முதல்-அமைச்சர் பதக்கமும், 2001ம் ஆண்டு யானை தந்தத்தை வெட்டியவர்களை கைது செய்ததற்காக வீரப்பதக்கத்தையும், 1997ம் ஆண்டு சிவகங்கை ஏரியில் கவிழ்ந்த பேருந்தில் 18 நபர்களை உயிருடன் காப்பாற்றியதற்காக 2001ம் ஆண்டு பிரதமர் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.




2005ம் ஆண்டு புகழத்தக்க சேவை செய்தததற்காக குடியரசுத் தலைவரின் விருதையும், சிறப்புமிகு சேவைக்காக 2013ம் ஆண்டு ஜனாதிபதி போலீஸ் விருதையும் வென்றுள்ளார்.


போலீஸ் பொறுப்பு!


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற காவல்துறையின் தாரக மந்திரத்தின் அடிப்படையிலே 50 வயதை கடந்தும் காவல்துறையில் பணியாற்றியதற்காக, பதவி உயர்வுகள், பதக்கங்களை பெற்ற சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்படவாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 28-ந் தேதி வெளியாக உள்ளது.


“ பதவி எதுவாக இருந்தாலும் போலீஸ் என்ற பொறுப்பு எப்போதும் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அதில் இருந்து ஒருபோதும் நான் மாறியதில்லை” என்று தனது தனிப்பட்ட வலைப்பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளதுடன் அதன்படியே வாழ்ந்து வரும் சைலேந்திர பாபு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததுடன் தமிழக காவல்துறைக்கும் வழிகாட்டியாக வலம் வருவதற்கு வாழ்த்துக்கள்.