திமுகவின் பவள விழாவில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த தமிழ்நாட்டின் முதலமைச்சருமான கருணாநிதியை செயற்கை நுண்ணறிவு மூலம் உரையாற்ற வைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் தொடங்கப்பட்ட, திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. ஒரு மாநில கட்சியாக மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு வகித்து வரும் திமுக, தோன்றி 75 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது.


இதையடுத்து, செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ஆம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவானதை இணைத்து பவள விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் விழாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கருணாநிதியை உரையாற்ற வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே. பெரியார் வகுத்த கொள்கையை, அண்ணா வகுத்த பாதையை, ஸ்டாலின் கட்டிக்காத்து திமுகவை ஆட்சி பொறுப்பில் அமைத்து வருவது பெருமிதமாக உள்ளது. ஸ்டாலின் என்றால் உழைப்பு. உழைப்பு" என AI மூலம் கருணாநிதி பேசும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.



விழாவில் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது - ஜெகத்ரட்சகன் எம்பி.,, பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்தாண்டு புதிதாக மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டு, அது எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் கவுரவிக்கும் விதமாக,  மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு ரூ.1 லட்சத்திற்கான பண முடிப்பு வழங்கப்பட்டுள்ளது.


நந்தனம் மைதானத்தில் செஞ்சி கோட்டைக்கு இணையாக கோட்டை வடிவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 18 இடங்களில் எல்இடி ஸ்க்ரீன்கள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 10,000 சதுர அடியில் எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 170 அடி நீளத்திற்கு கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான காட்சி அமைப்புடன் வரவேற்க 5000 வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளன.