சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வதை விட்டு பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என சி.ஐ.டி.யு.க்கு தொ.மு.ச. பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


பற்றி எரியும் சாம்சங் விவகாரம்:


இதுதொடர்பாக திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாதபோதும் கூட இடதுசாரிகளை ஆதரித்த ஓர் இயக்கம். நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட்ட அனந்த நம்பியாருக்கு.


திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா கழகத் தோழர்களின் கருத்தை நிராகரித்து அவரை ஆதரித்த வரலாறு உண்டு. அதேபோல் போக்குவரத்துக் கழகத்தில் உயர்நீதிமன்ற ஆணைப்படி ஒரே சங்கமாக இருக்க வேண்டுமென்ற தீர்ப்பின்படி 2010-ல் நடைபெற்ற தேர்தலில் தொ.மு.ச. 57% சதவிகித வாக்குகளைப் பெற்று முதன்மைச் சங்கமாகத் தேர்வு செய்யப்பட்டது.


அப்போது சி.ஐ.டியு 14% வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆனால் இச்செய்தியை கேள்விப்பட்ட திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது சி.ஐ.டியு தோல்லி குறித்து தன் வருத்தத்தை தெரிவித்திருந்தார்கள்.


"ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்"


இந்தச் சூழ்நிலையில் சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்களில் இடதுசாரிகளை அழைத்துப் பேசி ஓர் இணக்கமான முடிவுகளை மேற்கொண்டது திராவிட முன்னேற்றக் கழக அரசு.


ஏன்? கடந்த 2006-2011 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் கூட ஹூண்டாய் நிறுவனத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. அரசு சுமூகமாக பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்தப் பிரச்சினையில் மறைந்த பேரவைத் தலைவர் அண்ணன் குப்புசாமி அவர்களும் நானும் அப்போது தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த தாமோ. அன்பரசன் அவர்களும் எவ்வளவு முயற்சியில் ஈடுபட்டோம் என்பதை தொழிற்சங்க இயக்கங்கள் மறந்திருக்க முடியாது.


2001 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம் மற்றும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் போனஸ் அறிவிப்பு அநீதியைக் கண்டித்து தன்னெழுச்சியாக 17 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் கூடி எடுத்த முடிவின் அடிப்படையில் நிபந்தனை ஏதுமின்றி வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றோம்.


அதன் விளைவாக பல தொழிலாளர்கள் பல்வேறு அடக்குமுறை, பணி நீக்கம், ஊதிய இழப்பு போன்றவற்றை எதிர்கொண்டோம். அப்போது நான் தந்த வாக்குறுதி அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு தி.மு.கழக அரசு அமைந்தபோது பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணிக்கு எடுப்பது, வேலைநிறுத்த நாட்களை பணி நாளாகக் கருதி ஊதியம் வழங்குவது, தண்டனைகளை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தி.மு.கழக அரசு செய்து தந்துள்ளது என்பது கடந்த கால வரலாறு.


சர்வதேச தொழிலாளர் அமைப்பு கொண்டு வந்த தீர்மானம் 1949 முதல் சங்கம் அமைக்கும் உரிமை 87. கூட்டுபேரம் எண்.98 ஆகிய தீர்மானங்கள் இந்தியா உட்பட ஏன் சீனாவில் கூட ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை.


இந்நிலையில், இந்தப் போராட்டம் சம்மந்தமாக நீங்கள் கொடுத்த அறிக்கையின்படி நாங்கள் அறிந்து கொள்வது சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் துறையில் கொடுத்து இருப்பதாகவும், அது காலதாமதமாகி உள்ளது. அதனால் தாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந்து ஒரு தேக்க நிலையை உருவாக்கி தொழிலாளர் துறை பதிவு எண் வழங்கவில்லை என்று அரசின் மீது குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?


தமிழ்நாடு முதலமைச்சர் எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு வரும் சூழலில் அவரை தரம்தாழ்ந்து பேசுவதும், அவரை விமர்சிப்பதும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சரியாக இருக்குமா என்பதை நீங்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.


ஒரு பிரச்னையில் இளைஞர்கள், தொழிற்சங்கம் அனுபவம் இல்லாதவர்கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் இறங்கி விடுவது என்பது ஒன்றும் புதியது அல்ல, ஆனால் அனுபவம்மிக்க தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களிடம் இதனை எடுத்துக்கூறி இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


அரசு எல்லா நிலைகளிலும் தங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உறுதுணையாக தொ.மு.ச. பேரவையும் செயல்பட்டு வருகிறது. அந்த குழலில் தாங்கள் பிரச்சினையை மேலும் பெரிதுபடுத்தாமல் ஓர முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தங்கள் அனுபவத்தை கொண்டு முடிவுக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளது.