நாடாளுமன்றத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். 


சென்னை கோயம்பேடு தலைமை கழகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் “தேமுதிக இப்போது யாருடனும் கூட்டணி இல்லை. கூட்டணியில் இல்லாததாலேயே பாஜக கூட்டணிக்கு அழைக்கவில்லை. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். டெல்டாவில் கருகும் பயிர்களை காக்க தமிழக அரசால் தண்ணீரை பெற்றுத்தர முடியவில்லை. எதிக்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே முரண்பாடு உள்ளது” எனத் தெரிவித்தார். 


மேற்கொண்டு பேசிய அவர், “ நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் கூறவேண்டும். விஜயகாந்த்தைப் போல் நினைத்து அரசியலுக்கு வந்தால் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 


இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; 


இரண்டு மாத காலமாக மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி வேண்டிக்கொண்டு, மூன்று பெண்களை நிர்வாணப்படுத்தி பெண் இனத்தையே கொச்சைபடுத்தும் வகையில் கொடுஞ்செயலை செய்த நிகழ்வு ஒட்டுமொத்த பெண் இனத்திற்கு களங்கமாக உள்ளது. இனியும் வேடிக்கை பார்க்காமல் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தி, மணிப்பூரில் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தவறு செய்தவர்களை கண்டறிந்து கைதுசெய்து உரியவர்களுக்கு கடுமையான சார்பில் தண்டனை வழங்க வேண்டுமென்றும்,


கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பதவியேற்ற துணை முதலைமைச்சர் திருசிவக்குமார் அவர்கள் 9 ஆயிரம் கோடி ரூபாய் மேகதாது அணைக்கு நிதி ஒதுக்கீடு செய்து அணையை கட்டியே தீருவேன் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தமிழக முதலமைச்சர்  இதை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைமையில் கர்நாடக மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் சார்பாக கலந்துகொண்டது தமிழக விவசாய மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம், நமக்கு வரவேண்டிய 26.32 டிஎம்சி தண்ணீர் பெற்றுத்தராததால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் பயிர் காய்ந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாநில அரசு இந்தபிரச்சினையை தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 


திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்து திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல திமுக அரசு அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை உள்ளிட்ட மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.