தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ந்து காவல் துறை மீது அவதூறு பரப்பி வருவதாக டிஜிபி அலுவலகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. பதிவு செய்த (அக்.28) முதல் தகவல் அறிக்கை தகவல் நேற்று வெளியானது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசைத் திருப்ப முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.


டிஜிபி அலுவலகம் செய்திக்குறிப்பு


இந்த நிலையில், தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட  பொருள்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்னவென்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார்.


இந்த வழக்கை தாமதமாக என்.ஐ.ஏ.வுக்கு அனுப்பியதாக கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்குப்பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.


இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத  தடுப்பு சட்டப்பிரிவு ( UAPA)  சேர்க்கப்பட்டலோ அல்லது தேசியப் புலனாய்வு முகமை சட்டம், 2008இல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலோ, தேசியப் புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6இன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்துக்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.


அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, மத்திய அரசுக்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும்.  அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம்.


ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தேசியப் புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை, வழக்குப்பதிவு செய்த, காவல் நிலைய, புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.


கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது.


மேலும் சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில்,  ஒன்றிய உள்துறை தாமாகவே முன் வந்து NIA விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழ்நாடு முதலமைச்சர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை NIA விசாரிக்க பரிந்துரை  செய்தார்.


 இதில் எங்கே  தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்து கூட  வழக்குகள் NIA இடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவும் சில வழக்குகளில்,  சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே NIA விடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது  திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடில்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது.


ஏனென்றால்,  அவர் குறிப்பிடுவது புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும்,  யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட  பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. 


 அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி  ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. 


 18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21ஆம் தேதி  பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும்,  மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.  இவர் சொல்வது போல் கோவையில் இந்தச் சம்பவம் சில  குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருத்தால்  தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து வீடுகளை சோதனையிட்டு, வெடி பொருள்களை கைப்பற்றி இருக்கும்.


எனவே இது போன்ற உண்மையில்லாத  மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கார் வெடிப்பு சம்பவம்


கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.


இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 


ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக அப்சர் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.