2019 டிசம்பருக்குப் பின்னால் கொரோனாவைத் தவிர வேறு எந்த நோயுமே நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை. காரணம் கொரோனா காட்டிய மரண பீதி. ஆனால் இன்னமும் சத்தமில்லாமல் கொல்லும் நோய்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் அந்தந்த சீசனில் அந்த நோய்கள் அழையா விருந்தாளியாக வந்து அதன் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கின்றன. அண்மையில் கூட காரைக்காலில் காலரா பரவியது. அதேபோல் டெங்குவும் அதிகமாகப் பரவுகிறது. நாம் கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறோமோ அதையெல்லாம் இன்னும் பிற நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டும்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் சமாளிக்க முடியாத நோயாக உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில்  சில வருடங்களாகவே ‘மர்ம காய்ச்சல்’ என்கிற பெயரில்  டெங்கு காய்ச்சலின் தாக்கம் நிலவி வருகிறது. டெங்கு குறித்து மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாததே காய்ச்சல் பரவுவதற்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். 




டெங்குவில் இருந்து தற்காத்துக் கொள்வோம்:


டெங்கு  ஒரு வகை வைரஸால் பரவும் நோய்.டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), மற்றும் டென்-4 (DENV-4) என நான்கு வகை டெங்கு வைரஸ்கள் உள்ளன.  எகிப்தில்தான் முதன்முதலில் நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் எகிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. 


டெங்கு நோய் பருவமழைக் காலங்களில் தான் அதிகம் பரவும். இந்தியாவில் இதுவரை 143 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இங்கு மட்டுமல்ல சிங்கப்பூரிலும் டெங்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இந்த ஆண்டில் இதுவரை 11,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5258 ஆக இருந்ததாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.


டெங்கு காய்ச்சலை சரியான காலத்தில் கண்காணித்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது உயிரைப் பறிக்கவல்லது என்பதில் எந்த ஐயமும் இல்லை. வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும். டெங்கு நோய் கொசுக்களால் பரவும் நோய். ஏடிஸ் ரக கொசுக்கள் மூலம் இது பரவுகிறது. இது நன்னீரில் வளரக்கூடியது. அதனாலேயே டெங்கு பரவாமல் இருக்க வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதி என்றால் கொசுவிரட்டிகளை பயன்படுத்த வேண்டும். எப்போதும் முழுமையாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். வீட்டையும், வீட்டின் சுற்றுப்புறத்தையும் கொசுக்கள் அண்டாதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


டெங்கு நோய் அறிகுறிகள்:


டெங்கு நோயின் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்ணின் பின்புறம் வலி, எலும்பு மூட்டு வலி, தோலில் தடிப்புகள், குமட்டல், வாந்தி ஆகியன டெங்கு நோயின் பிரதான அறிகுறியாக அறியப்படுகின்றன. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது மட்டுமே இதற்கான சரியான தீர்வு.