ஏப்ரல் தொடங்கி மே வரையிலான காலகட்டத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொடத் தொடங்கியது. சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகளை தேடி அரசு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் குவியத் தொடங்கியனர். ஆக்சிஜன்  படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சிலேயே பல கொரோனா நோயாளிகள் காத்திருந்த அவலம் நிகழ்ந்தது. இந்த நிலையில் 77 நாட்களுக்கு பிறகு சென்னையில் மூவாயிரத்திற்கும் குறைவாக பதிவாகி இருப்பதும் ஆக்சிஜன் படுக்கைக்காக ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் சூழல் இல்லாததும் சிறு ஆறுதலை அளிப்பதாக உள்ளது. கடந்த மே 12-ஆம் தேதி சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு 7, 564 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. அடுத்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை 6016-ஆக குறைந்த நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு மே 24-ஆம் தேதி 4, 985-ஆகவும் மே 27-ஆம் தேதி மூவாயிரத்திற்கும் குறைவாக பதிவாக தொடங்கியுள்ளது. மக்கள் நடமாட்டம் குறைந்ததும், ஆரம்ப அறிகுறிகள் இருக்கும்போதே மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதுமே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது



இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது. சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டேன்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் ஆம்புலன்சிலேயே கொரோனா நோயாளிகள் காத்திருந்த அவலம் இருந்தது. இதனை குறைக்க ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 136 படுக்கைகள் உடன் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த்தக  மையத்தில் 800 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. இராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையமும் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ கொரோனா மையமும் அமைக்கப்பட்டு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனைகளை செய்வது, தினமும் 400 காய்ச்சல் சோதனை முகாம்களை அமைத்து மக்களின் உடல்நிலையை கண்காணிப்பது, கார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை வசதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட அம்சங்கள் கொரோனா தொற்று குறைய மிக முக்கிய காரணங்களாக இருந்தது.



திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் தற்போது ஆக்சிஜன் கையிருப்பு 650 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து வரும் ஆக்சிஜனை மத்திய அரசு ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க அதிகரித்தது, ஸ்டெர்லைட், JSW  நிறுவனங்களில் தொடங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி, ஒரிஷாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆகிய காரணங்கள் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறைய காரணமாக இருந்தது. தற்போது தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை என்பது 500இல் இருந்து 550 மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில் தினமும் 100 மெட்ரிக் டன் வரை ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. சென்னையில் மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது 8000 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.