ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர்.


இதுபோன்று தினமும் புதுப்புது யுக்தியுடன் வலைவிரிக்கும் 'சைபர்' திருடர்களிடம் சிக்காமல் இருக்க, விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.


ஓ.டி.பி எண் மூலம் மோசடி


தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர். அந்தவகையில் பல விதமான ஆன்லைன் மோசடிகள் பல அரங்கேறி வருகிறது. அதன்படி,  ஸ்மார்ட் போன் படுத்துவோரின், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு 'லிங்க்' ஒன்று வருகிறது. அதில், 'உங்களுக்கு வங்கி, வீட்டு கடன் கேட்டு தேவையற்ற அழைப்புகள் வருகிறதா, அதுபற்றி புகார் தெரிவிக்க, இந்த 'லிங்க்'கை 'கிளிக்' செய்யுங்கள்' குறிப்பிடப்பட்டு உள்ளது. 


நாமும், தொல்லை ஒழிந்தால் போதும் என நினைத்து, அந்த லிங்க்கை கிளிக் செய்தால், கஸ்டமர் சர்வீஸ் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டதும் உங்கள் மொபைல் எண்ணுக்கு  ஓ.டி.பி எண் வருகிறதது. எதிர்முனையில் இருப்பவர்களின் பேச்சை நம்பி ஓ.டி.பி எண்ணை தெரிவித்தால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது.


இதுமட்டுமின்றி, எதிர்முனையில் பேசுபவரை நம்பி, மற்றொரு மொபைல் போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் பணம் திருடப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.


மின் கட்டணம் மூலம் மோசடி


மேலும், மின் கட்டணம் மூலம் மோசடி நடைபெற்று வருகிறது. அதன்படி, நீங்கள் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணம் இணையத்தில் அப்டேட் ஆகவில்லை. உடனடியாக ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்த வேண்டும். தவறினால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மோசடி செய்து வருகின்றனர்.


இதுமட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்து வங்கி கடன் பெற்று தருவதாக கூறி விவசாயிகளை குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் மோடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி மோசடி


இதனை தொடர்ந்து மொபைல் போன் எண்ணிற்கு பல லட்சம் ரூபாய் பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளது. அதை எடுக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறி மோசடியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.


சமீபத்தில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து ஒன்பது நிமிடங்களில் ரூ2.45 லட்சத்தை சைபர் கிரைம் குற்றவாளிகள் திருடி உள்ளனர்.  நைஜீரியாவைச் சேர்ந்த நபர்கள்  டெல்லியில் முகாமிட்டு, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கண்ணுக்கு தெரியாமல் எங்கேயோ இருக்கும் மர்ம நபர்களை நம்பி பொதுமக்கள், ஓ.டி.பி எண் மட்டுமல்ல எந்த தகவல்களை பகிர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.