தைப்பூசத் திருவிழா:


பழனி முருகன் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில், தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.


இன்று கொடியேற்றம்:


இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெற உள்ளது. நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.


நிகழ்ச்சி நிரல்:


தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.


மறுநாள் 4-ந்தேதி சனிக்கிழமை தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.


சமயபுரத்தில் தைப்பூசத் திருவிழா:


முன்னதாக, திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில்,  தைப்பூசத் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, இரவில் அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவில் பூத வாகனம், மரஅன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மரயானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.