கடலூரை சேர்ந்தவர் சுபாஷ், இவர் கடந்த 15 ஆண்டுகளாக மரைன் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கார்கோ ஷிப் எனப்படும் சரக்கு கப்பலில் இவரது பணி இருப்பதால் ஆண்டுக்கு 6 மாதத்திற்கு மேல் இவருக்கு  கடலிலேயே வேலை.

 

 பல்வேறு நாடுகளுக்கும் இவரது பயணம் இருக்கும் நிலையில், இவரது மனைவி,  'என்னையும் கப்பலுக்கு அழைத்துச் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். ஆனால் தான் பணிபுரிவது  சரக்கு கப்பல் என்பதால் அந்த ஆசையை‌ நிறைவேற்ற முடியாததால்  மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கப்பல் மாதிரி வீடு கட்ட முடிவு செய்துள்ளார்.

 

 கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் சுபாஷ்  11,000 சதுர அடியில் இடத்தினை வாங்கி அதில் 4,000 சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் துவங்கினார். கடந்த இரண்டு ஆண்டு காலம் இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்து அந்த வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடத்தி முடித்துள்ளார்.

 

பிரம்மாண்ட கப்பல் போன்று தோற்றம் உள்ள இந்த வீட்டினை சுற்றி தண்ணீர் நிற்கும் விதமாக வழிவகை செய்துள்ளார். அதன் பிறகு இந்த வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகள் அமைத்து அதன் வழியாக ஆறு அறைகளை கட்டி இந்த வீட்டினை பிரம்மாண்டப்படுத்தி உள்ளார். மேலும் நீச்சல் குளம், வீட்டில் உடற்பயிற்சி கூடம் என தனித்தனியா அறைகள் ஒதுக்கியும் நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு அறை அமைத்து அதன் வழியாக வெளியிடங்களையும் பார்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார். 

 

இது மட்டுமல்ல இரவு நேரங்களில் இந்த வீட்டினை பார்க்கும் பொழுது ஒரு கப்பல் தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகள் அமைத்து கட்டியுள்ளார்.



 

மேலும் அவர் கட்டிய கப்பல் வடிவிலான வீட்டிற்கு S4 என குறியீடு முறையில் பெயர் வைத்துள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் முதலெழுத்து எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் S4 குடும்பம் என எங்களை நாங்கள் அழைத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தனக்கு திருமணமான உடனேயே ’என்னை கப்பலில் அழைத்துச் செல்ல கூறியபோது’, மலேசியாவில் சென்று சாதாரண ஒரு கப்பலை காட்டியதாகவும் தான் பணிபுரியும் கப்பலுக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு குறைவு எனக் கூறிய நிலையில் கப்பல் போன்று உங்களுக்கு வீடு கட்டி தருகிறேன் என்று கூறியதாகவும், ஆனால் அது சாத்தியப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது கப்பல் மாதிரியே வீடு கட்டி அதற்குள் எங்களை அழைத்து வந்து விட்டார் என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் சுபாஷின் மனைவி சுபஶ்ரீ.