புகளூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால் விரைந்து பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் இருந்து கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலுக்கு  தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் நொய்யல் , செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, நன்செய் புகளூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது. அதனைத் தொடர்ந்து நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர் கோம்பு பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, நன்செய் புகழூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக செல்கிறது.  இதை  தாய் வாய்க்காலாக கொண்டு  இதில் இருந்து பாலத்துறை அருகே பிரியும்  பள்ளவாய்க்கால், செம்படாபாளையம் அருகே பிரியும் பாப்புலர் முதலியார் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகியவற்றில் புகளூர் வாய்க்காலில் இருந்து உபரி நீர்  திருப்பி விடப்படுகிறது.


 


 




இந்த 5 வாய்க்கால்கள் மூலம் வரும் தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில்   தென்னை, வாழை, கரும்பு, நெல், வெற்றிலை, மரவள்ளி, கோரை உட்பட பல்வேறு பணப்பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை கோடை காலத்தில் வாய்க்கால் தூர் வாரும்  பணி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் புகளூர் வாய்க்காலில் வருடந்தோறும்  மே மாதம் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் வாய்க்காலில் பராமரிப்பு  பணியை  முடித்து விட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது.


 


 



 


அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி அன்று புகளூர் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக காரணாம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணியில் இருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு 45 நாட்களுக்கு மேலாகியும்  புகளூர் வாய்க்காலின் பராமரிப்பு பணி நிறைவடையவில்லை. இதன் காரணமாக இன்னும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் நொய்யல் முதல் புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பணப் பயிர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் பாய்ச்சாததால்  கரும்பு, வாழை, நெல், வெற்றிலை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வாடி கருகி வருகின்றன. வாடி கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற உடனடியாக புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர் .


 


 



 


அதன் அடிப்படையில் விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று  மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் புகளூர் வாய்க்காலில் மந்தமாக நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மதகுகள் சீரமைக்கும் பணிகளை  கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாய்க்காலில் தூய்மைபடுத்துதல் மற்றும் மராமத்து பணிகள் தொய்வடைந்ததையும்,  மரவாபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் வாய்க்கால் மராமத்து கட்டுமான பணிகளையும் நொய்யல் முதல் மதகுகள் பராமரிப்பு செய்யும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சுமார் 40 மதகுகள் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை சுமார் மூன்று மதகுகள் மட்டுமே பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. அதைப் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், வாய்க்கால் பராமரிப்பு பணிகள் மற்றும் மதகுகள் சீரமைக்கும் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பணிகளை விரைவில் முடித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதியை சார்ந்த விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.