கடலூர் மாவட்டம், காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கமலீஸ்வரி (வயது 60). இவரது கணவர் சுரேஷ் குமார், கம்பவுண்டராக பணிபுரிந்து ஓய்வுப்பெற்றவர். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக உயிரிழந்தார். 


சுரேஷ் குமார், கமலீஸ்வரி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். மேலும் மூத்த மகன் சுரேந்திர குமார் (வயது 42) ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஐ.டி ஊழியரான இளைய மகன் சுதன் குமார் (வயது 40) ஐதராபாத்தில் வசிக்கிறார். இவரது மகன் நிஷாந்த் குமார் (வயது 10) பாட்டி கமலீஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் தங்கியுள்ளார்.


இந்நிலையில், சுதன் குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக தனது அம்மா கமலீஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில்  வீடு வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டினுள் இருந்து புகை நாற்றம் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.


தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை திறந்து பார்க்கையில் கமலீஸ்வரி, சுதன் குமார், இவரது மகன் நிஷாந்த் ஆகிய மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக் கிடந்துள்ளது. இதனால், யாரோ மூவரையும் கொலை செய்துவிட்டு அவர்களை எரித்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது கொலையாகத் தான் இருக்கும் என போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் கடலூர் எஸ்.பி.ராஜாராமன் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.





ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் எரித்து கொலை


மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டு வீடு முழுவதும் ஆய்வு செய்து குற்றவாளிகள் யார் என கண்டறியும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரபடுத்தி உள்ளனர். 


மேலும் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.


காராமணி குப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் ஏராளமான சம்பவ இடத்தில் கூடியதால் மேலும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் கூடிய பொது மக்களை அப்புறப்படுத்தி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.