கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டித்தும் அதே நேரத்தில் கூடுதல் தளர்வுகளை அதிகரித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,


“ எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையை கருத்தில் கொண்டும், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் 13-ந் தேதி( நேற்று) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.




அதனடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதை கருத்தில் கொண்டு,



  • இன்று முதல் ஏற்கனேவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

  • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் உள்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனமதி அளிக்கப்படுகிறது.

  • அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.




மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.



  • மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.

  • தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம்.

  • மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

  • ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதி

  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி.

  • திருவிழாக்கள், அரசியல் சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.




ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.


எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.


பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண