திரைப்படத்தில் கவுரவ தோற்றம் போல அரசியலில் விஜய் வந்து செல்கிறார் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.


சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது பேசிய அவர், “சீனாவில் உருவாகியுள்ள ஏ.ஐ. கருவி உலகையே உலுக்கி வருகிறது. ஆனால் நாம் இன்னும் மலைக்கு போய் இந்த சாமி இருக்கிறது. அந்த சாமி இருக்கிறது என பேசி வருகிறோம். பெரியார் சர்ச்சையும் தேவையில்லாததுதான்.


பொருளாதாரம் வேலையின்மை என அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் என்ன உணவு சாப்பிட வேண்டும் என பிரச்சினைகள் எழுகிறது. தனி மனித உரிமைகள் என்ன என பிரச்சினை எழுகிறது.


விஞ்ஞான ரீதியிலோ அறிவியல் பூர்வமாகவோ பொருளாதாரம் குறித்த விவாதம் நடக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.


பாஜக யாரையாவது வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்து கொள்கிறதே தவிர யாரும் விரும்பி போய் சேருவது இல்லை. பாஜகவுடன் யாரும் விரும்பி கூட்டணி வைக்க மாட்டார்கள். பாஜகவுடன் யாராவது கூட்டணி வைத்தால் கூட்டணிக் கட்சியின் வாக்கு வங்கியும் குறையும் என்பது உண்மை.


நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த குறைந்த செல்வாக்கை கூட பாஜக இழந்துவிட்டது.


தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று சொன்னார். ஆனால் எங்கு விமான நிலையம் வேண்டும் என சொல்லவில்லை. விஜய் திரைப்படத்தில் கவுரவ தோற்றம் வருவது போல அரசியலில் வந்து செல்கிறார்.



வேங்கை வயல் விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருப்பது வியப்பு அளிக்கிறது. இந்த வழக்கில் சிக்கல் இருந்தால் நீதிமன்றத்தை நாடிதான் சிபிஐ க்கு மாற்ற சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.


முன்னதாக தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரியார் சர்ச்சை, வேங்கைவயல் பிரச்சினை, பரந்தூர் விமான நிலைய பிரச்சினை என தமிழக அரசியல் களமே பரபரப்பாய் காணப்படுகிறது. இவை அனைத்திற்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார்.