தஞ்சை கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர் சுவாமிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஹெலிகாப்டர் சகோதரர் என்று அழைக்கபடும்  கும்பகோணத்தை சேர்ந்த சுவாமிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

 

அதில், "என் மீது நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர். தற்போது வரை சிறைக் காவலில் இருந்து வருகிறேன். இந்த வழக்கில் 12 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுபடுகிறேன் என கூறியிருந்தார்.

 



 

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது  விசாரணையின் போது கைது செய்து 150 நாட்களை கடந்த நிலையில் இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன், சுவாமிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.



இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது இலங்கை நாட்டின் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தது ஏற்புடையதல்ல. இந்திய மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற் படையினரால் சுடப்பட்டதில் ஒருவர் இறந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட ஒன்றிய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து கடுமையாக எச்சரித்தது. ஆனால், தமிழக மீனவர்கள் 68 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு 68 இந்திய மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி அமர்வு, "இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். தமிழக அரசு தரப்பில், "தமிழக முதல்வர் 68 மீனவர்களையும் இலங்கையில் இருந்து இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது

 

மத்திய அரசு தரப்பில், "68 மீனவர்களை இந்தியா கொண்டு வருவதற்காக இலங்கை வெளியுறவு துறையை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை" என கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்தை சந்திக்கும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.