CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin: டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Continues below advertisement

CM Stalin: டங்ஸ்டன் சுரங்க பிரசனைக்கு அதிமுக மற்றும் பாஜகவே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Continues below advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் உரை

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக மதுரை மாவட்டம், வள்ளாலபட்டி கிராம மக்கள் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய அவர், “நான் வேறு, நீங்கள் வேறு' என்று நான் பிரிக்க விரும்பவில்லை. இது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி. ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரைக்கும், டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் சக்தியோடு அதை நாம் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். அதற்கான மகிழ்ச்சி மிக்க வெற்றி விழாவாக இது அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய இந்த நேரத்தில், உங்கள் மகிழ்ச்சியில் நானும் கலந்து கொள்வதற்காக நான் உங்களை நோக்கி வந்திருக்கிறேன்.

மத்திய அரசு மீது சாடல்:

இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக அரசைப் பொறுத்தவரைக்கும் என்னென்ன கொடுமைகளை, என்னென்ன அக்கிரமங்களை மக்களுக்கு விரோதமான செயல்களை எல்லாம் எதேச்சதிகாரமாக செய்து கொண்டிருப்பது என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். தலைநகர் டெல்லியில் குளிரிலும், வெயிலிலும் போராட்டம் நடத்தி, நூற்றுக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள் இறந்து போயிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அப்படி நடத்திய அந்த போராட்டம் எவ்வளவு நாட்கள் நடத்தப்பட்டது என்று கேட்டீர்கள் என்றால், 2 ஆண்டுகள் நடைபெற்றது. ஆனால், டங்ஸ்டன் கரங்கம் ஏலம் விடப்பட்ட செய்தி வெளியான உடனே, நீங்களே போராட்டம் நடத்தினீர்கள். ஆனால். மூன்றே மாதத்தில் நீங்கள் வெற்றியை கண்டிருக்கிறீர்கள் அதுதான் முக்கியம். ஒன்றிய அரசு பணிந்து அதை ரத்து செய்திருக்கிறது. இதற்கு காரணம் மக்களாகிய நீங்களும், நம்முடைய தமிழ்நாடு அரசும் காண்பித்த மிகக் கடுமையான எதிர்ப்புதான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். 

அதிமுக மீது குற்றச்சாட்டு

இந்த டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மூலகாரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், மாநில அரசு அனுமதி இல்லாமல், முக்கிய கனிம வளங்கள் ஒன்றிய அரசே ஏலம் விடலாம் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இதற்கு மூலகாரணம்! இந்த சட்டம் கொண்டு வருவதற்காக பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றிய நேரத்தில், அன்றைக்கு அதை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து அதை கடுமையாக எதிர்த்தோம். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. என்ன செய்தது? அதை எதிர்த்தார்களா? இல்லை. அதுவும் குறிப்பாக மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கக்கூடிய தம்பிதுரை அவர்கள். அவர் என்ன பேசினார் என்று கேட்டால், இந்த சட்டத்தை ஆதரித்து, வரவேற்றுப் பேசியிருக்கிறார். அது எல்லாம் தொலைக்காட்சியில் வந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பார்த்திருப்பீர்கள். இதுதான் டங்ஸ்டன் பிரச்சினையின் தொடக்கப்புள்ளியாக இருந்தது

போர் பிரகடனம்:

இதை அரசியலாக நான் நினைக்கவில்லை. இது நம்முடைய பிரச்சனை. ஆகவே, அரசியல் பிரச்சனையாக நான் கருதவில்லை. ஆனால், நான் மிகமிகத் தெளிவாக சொன்னேன். நான் ஒரு போர்ப்பிரகடனத்தை வெளியிட்டேன். நான் இருக்கின்ற வரையில் நிச்சயம் டங்ஸ்டன் கனிமவள சுாங்கும் வருவதற்கான வாய்ப்பே இல்லை. நாம் அனுமதி தந்தால்தான் அவர்கள் உள்ளே கொண்டு வரமுடியும். அதையும் மீறி வந்தால், நிச்சயமாக நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன் என்று அழுத்தந்திருத்தமாக சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறேன். 

அப்படி ஒரு சூழல் வந்தால், முதலமைச்சராக நான் இருக்க மாட்டேன்" என்று சொன்னபோதும் நம்முடைய அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஏன் அந்த வார்த்தையை சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்கள். எனக்கு அதுபற்றிய கவலையில்லை, பதவி பற்றி கவலையில்லை. மக்களைப் பற்றிதான் கவலை. மக்களுடைய பிரச்சனை தான் கவலை என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னேன்.

நான் ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகே தெளிவாக நான் சொன்னேன். "இது என்னுடைய அரசு இல்லை, இது உங்களுடைய அரசு " என்று சொல்லி இருக்கிறேன். என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லி தான் நான் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில் தான் அவர்கள் வழியில் நின்று ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன். எங்களுக்காக இல்லை என்கிற உறுதியை மீண்டும் அளித்து, உங்களுக்காகத்தான் இந்த ஆட்சி என்பதை மீண்டும் எடுத்துச் சொல்லி, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்து கொண்டு, விடைபெறுகிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Continues below advertisement