கலைஞர் 100 (Kalaingar 100) விழாவில் பங்கேற்ற திரையுலக உடன்பிறப்புகள் அனைவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” (Kalaingar 100) நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, கீர்த்தி சுரேஷ், ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, கார்த்தி, சிவகார்த்திகேயன், வெற்றிமாறன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட கலைஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரைத்துறையினர் பயன்பெறும் வகையில் ரூ.540 கோடி செலவில் சகல வசதிகளுடன் கூடிய கலைஞர் திரைப்பட நகரம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல புதிய திட்டங்களை அறிவித்தார். 


இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது #கலைஞர் எனும் அடைமொழிதான்!  'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் 'கலைஞர்' என்பதைத்தான். கலையுலகுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் இருந்த உறவுக்கு அப்பெயரே சிறந்த சான்று. 






"Art should comfort the disturbed and disturb the comfortable" என்ற வரிக்கேற்பத் தம் படைப்புகளில் எல்லாம் அரசியலை நுழைத்து, சமூக இழிவுகளைச் சாடிய அசலான கலைஞருக்கு அவரது தாய்வீடாம் தென்னகத் திரையுலகத்தின் சொந்தங்கள் எல்லாம் கூடி எடுத்த #கலைஞர்100 மாபெரும் கலைவிழா கண்டு - அக்காவியத் தலைவனின் கொள்கை வாரிசாக, அவர் பண்படுத்திய தமிழ் மண்ணின் முதலமைச்சராக அகமகிழ்கிறேன். அவரது மகனாக நன்றி நவில்கிறேன். 65 ஆண்டு காலம் அவர் பயணித்த துறையில் இருந்து திரண்டு வந்து அவர் நினைவைப் போற்றிய திரையுலக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி! நன்றி! கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை!” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Kalaingar 100: “ரூ.540 கோடியில் திரைப்பட நகரம் அமைக்கப்படும்” - கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு