பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, 


திருவள்ளுவர் கசந்துவிட்டார்:


"‘தமிழ்நாடு’ என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை! இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள்… இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல… இப்படிப்பட்ட பட்ஜெட்டில், திருக்குறள் இடம்பெறாதது ஒருவகையில் நிம்மதிதான்! 


இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது… சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி! 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே – மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. “தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள்!


ரயில்வே துறையை மாநிலத்திற்கு கொடுத்துவிடுவீர்களா?


ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது! ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது! 


கேட்டால், 'இது மாநில அரசின் திட்டம்' என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள்... அப்படி என்றால், இரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை! ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து – நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்? 


வஞ்சக முயற்சி:


கடந்த ஆண்டு இரண்டு முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது! இதற்கு நிவாரணமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 276 கோடி ரூபாய் நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றிவிட்டார்கள். சரி, இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர். 


ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு - ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு. இது எல்லாவற்றையும்விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால்.. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள்.


தேசிய கல்விக்கொள்கை:


தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ – மாணவிகளின் கல்வி பாழாகுமே… அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க. அரசு இருக்கிறது. 


அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள்… மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார், ஒன்றிய நிதி அமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நான் கேட்பது என்னவென்றால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? 


பழிவாங்கும் பட்ஜெட்:


கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்! சுயநலத்துக்காக - நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக – ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன்… மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்! மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்! இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது! இதற்கு பா.ஜ.க. பதில் சொல்லியே தீர வேண்டும்!"


இவ்வாறு அவர் பேசியுள்ளார்.