சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு:



  • அரசு ஊரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து நிதிநிலை அறிக்கையில் 1.4.2022 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு 2022 ஜனவரி 1-ந் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதனால், 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரத்து 480 கோடி செலவாகும்.

  • சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும். இதன்மூலம், 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்.

  • அரசுப்பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், உயர்கல்விகளுக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசு அறிவித்துள்ள வழிகாட்டின்படி விரைவில் அறிவிக்கப்படும்.

  • அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

  • ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.

  • 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் முந்தையை அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்.

  • வேலைநிறுத்த போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்த ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் கலந்தாய்வின்போது உரிய முன்னுரிமை அளிக்கப்படும். போராட்டக் காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும்.

  • பணியின்போது காலமான அரசுப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் அரசுப்பணி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்குவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வௌியிடப்படும்.

  • மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சையை பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 லட்சம் ரூபாயைவிடவும் கூடுதலாக, கொரோனா சிகிச்சைக்கான செலவுத்தெகை அரசு நிதி உதவியின்கீழ் அனுமதிக்கப்படும்.

  • கணக்கு மற்றும் கரூவூலத்துறையில் பணிகளை எளிதாக மேற்கொள்ள மாவட்டந்தோறும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

  • புதியதாக பணியில் சேரும் அரசுப்பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் மாணவர் விகிதாச்சார தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.


இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.