தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது. தேர்தல் நடத்தப்படாததால் இந்த மாவட்டங்களின் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் முடங்கிப்போய் உள்ளன. இந்த தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு உறுதி அளித்தது.


செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தேர்தல் நடத்தும் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இது தொடர்பாக 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே, வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த 31ம் தேதி, தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்கள் மற்றும் தேர்தல் முடிந்து காலியாக இருக்க கூடிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளை அண்மையில் வெளியிட்டது. இதில் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் வாகனங்களில் பின்பற்றக்கூடிய நடத்தை விதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் குறிப்பாக மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டிய அவசியமில்லை என்றும், கட்சித் தலைவர்களின் படங்களை வெளிப்படையாக வைக்க அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இதன் தொடர்ச்சியாக இன்று மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களை பரிசீலித்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கபடி விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அரசியல் கட்சிகள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.