Aavin :  சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 


ஆவின்


தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலமாக மாநிலம் முழுவதும் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களைவிட ஆவின் பால் விலைக் குறைவு என்பதால் அதிகமான  மக்கள் ஆவின் பாலை வாங்குகின்றனர். பால் உற்பத்திக்கான விலைவாசியும் அதிகரித்த நிலையில், பால்கொள்முதல் விலையை அதிகரிக்கும்படி பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


தனியார் நிறுவனங்களும் ஆவின் பாலை ஒட்டியே தங்கள் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இருப்பினும் கடந்த சில நாட்களாகவே ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில், மேலும், ஒரு புகாரில் ஆவின் நிறுவனம் சிக்கியுள்ளது. 


 சிறார் தொழிலாளர்களா? 


சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சிறார்களை வேலைக்கு அமர்த்தியதும் மட்டுமின்றி அவர்களுக்கு ஊதியமும் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதனால் பால் பண்ணை நுழைவாயில், வேலையை வாங்கிக் கொண்டு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி 30 சிறார்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து போராடி கொண்டிருக்கக் கூடிய சூழலில், சிறார் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 


காரணம்


சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக அங்கு நடக்கும் அனைத்து பணிகளும் தாமதாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதானால் சிறார்களை வேலைக்கு அமர்த்தியதாக கூறப்படுகிறது. அதுவும் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட சிறார்களுக்கு ஊதியமும் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசு நிறுவனத்திலேயே சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 


அமைச்சர் விளக்கம்


இதற்கு விளக்கம் அளித்த பால் வளத்துறை அமைச்ர் மனோ தங்கராஜ், ”ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வரக் கூடிய அனைத்து தொகையையும் அளிப்பதற்கான நடவடிக்களையும் செய்து வருகிறோம். சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்களா என்று தெரியவில்லை.  இது பற்றி உரிய ஆய்வு நடத்தி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும், ஒப்பந்த பணியாளர்களின் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி ஆலோசனை நடத்தி உறுதிப்படுத்தப்படும்” என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ  தங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.




மேலும் படிக்க


IAS Officers Transfer: தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. யாருக்கு என்ன பொறுப்பு..!


சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்...! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?