தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதில் மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே. பிரவின் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ். பாலச்சந்தர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர், இதே மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 


மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையராக டி.ரத்னா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்னர், சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக செயல்பட்டு வந்தார். 


அதேபோல், போக்குவரத்துறை ஆணையராக ஏ. சண்முக சுந்தரம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்னர் பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்துறை ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சமூகநலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக இருந்த டி. ரத்னா ஐஏஎஸ் மதுவிலக்குத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது அந்த பொறுப்புக்கு, நிலவியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையராக இருந்த ஜெயகாந்தன் ஐஏஎஸ் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


 






சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குநனராக சிம்ரஞ்சித் சிங் காலோன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்னர், மதுரை மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த நிலையில் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


நிலவியல் மற்றும் சுங்கத்துறை இயக்குனராக எல். நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்னர் போக்குவரத்துறை அணையராக செயல்பட்ட வந்த நிலையில் நிலவியல் மற்றும் சுங்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 


தமிழ்நாட்டில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள துறை குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ மக்கள் மற்றும் செய்தி தொடர்புத்துறையின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.