CM Stalin: சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  


புரட்டி போட்ட மிக்ஜாம் புயல்:


தலைநகர் சென்னையை  மிக்ஜாம் புயல் உலுக்கி எடுத்து சென்றுவிட்டது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட கடலோர தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் 40 செ.மீ மழை பதிவானது. இதனால் சென்னையில் இருக்கும் அனேக பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் வடபழனி, சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி ராயப்பேட்டை , ஊரப்பாக்கம், துறைமுகம் , எண்ணூர் , வியாசர்பாடி , சைதாபேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.  47 ஆண்டுகளுக்கு பிறகு  வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்த காரணத்தால் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.


தொடரும் மீட்புப்பணிகள்:






இதனால், அத்தியாவசிய தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பால், தண்ணீர், மின்சாரம் போன்றவைகள் இல்லாமல் மூன்று நாளாக மக்கள் தவித்து வருகின்றனர். சில இடங்களில் மழைநீர் வடிந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் மின்சாரம் கிடைக்காமலும்,  மழைநீர் வடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, மூன்றாவது நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை வாடகைக்கு எடுத்தது மட்டுமின்றி, மீனவர்களின் படகுகளும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.


நேரில் களமிறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்:


மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 4 ஹெலிகாப்டர்கள் மூலம் 16 இடங்களில் இதுவரை 950 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,  சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.  அங்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவும் வழங்கினார். 




மேலும் படிக்க


Electricity Bill:மின்கட்டணம் செலுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்... அரசு அறிவிப்பு